திருச்சியில் இன்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார் நிருபர்களிடம் கூறியதாவது..
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தேர்தலை மட்டுமே மனதில் வைத்து செயல்படும் கட்சி அல்ல. அனைத்து நேரங்களிலும் மக்களுக்காக மக்கள் நலனையே கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறது. இதனால் மக்கள் மனதில் சமத்துவ மக்கள் கட்சிக்கு நல்ல இடம் உள்ளது.
மக்கள் பணியில் தொடர்ந்து எவ்வாறு செயல்பட வேண்டும், கட்சி வளர்ச்சி பணியை தீவிரப்படுத்துவது எப்படி என்பதற்தாக திருச்சியில் இன்று தொகுதி செயலாளர்கள் கூட்டத்தை நடத்துகிறோம்.
கர்நாடகாவில் மேலும் 2 அணைகள் கட்டுவதை தடுப்பது குறித்து அம்மாநில முதலமைச்சரை நேரில் சந்தித்து மனு கொடுத்து வலியுறுத்துவோம். தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி சிறப்பாக நடந்து வருகிறது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வழக்குகளில் வெற்றி பெற்று மீண்டும் முதலமைச்சராக வருவார்.
முதலமைச்சராக ஜெயலலிதா இல்லை என்பதற்காக சில கட்சிகள் எதையாவது குறை கூறி கொண்டே இருக்கின்றன. சட்ட சபையை கூட்ட வேண்டும் என்று தி.மு.க. கூறுவது நியாமில்லை. சட்ட சபையை கூட்டினாலும் அவர்கள் வெளி நடப்பு தான் செய்கிறார்கள்.
ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.விற்கு தான் கொள்கை, தார்மீக அடிப்படையில் ஆதரவு அளிப்போம். தமிழக மீனவர்கள் 5 பேருக்கு பொது மன்னிப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று கூறுகிறார்கள். இப்பிரச்சினையை பொறுத்த வரை தமிழக மீனவர்கள் என்று பாராமல் தமிழகத்தில் உள்ள இந்திய மீனவர்கள் என்று நினைத்து செயல்பட வேண்டும்.
இப்பிரச்சினையை வைத்து பா.ஜனதா தன்னை வளர்த்து கொள்ள நினைக்கிறதா என்பதற்கு பதில் கூறவில்லை. ஏனென்றால் நடிகர் ரஜினியை வைத்து கட்சியை வளர்க்க நினைப்பவர்கள் அவர்கள். ரஜினி மட்டுமல்ல யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஜி.கே.வாசன் புதிய கட்சிக்கு சமத்துவ மக்கள் கட்சி ஆதரவா என்று கேட்பது சரியல்ல. புதிய கட்சியை அவர் தான் தொடங்குகிறார். அவர் தான் எங்களுக்கு ஆதரவு தருவாரா என்று கேட்க வேண்டும்.
நடிகர் சங்கம் சிறப்பாக செயல்படுகிறது. நஷ்டத்தில் இருந்த நடிகர் சங்க நிதியை நாங்கள் தற்போது 3½ கோடி நிதி இருப்பு இருக்கும் வகையில் உயர்த்தி உள்ளோம். இதன் மூலம் நலிந்த கலைஞர்களுக்கு உதவி வருகிறோம். மீதி உள்ள நிதியை வைத்து நடிகர் சங்க இடத்தில் கட்டிடம் கட்டி அதன் மூலம் நலிந்த கலைஞர்களுக்கு உதவ முடிவு செய்துள்ளோம்.
அதன் அடிப்படையில் திரைப்பட துறையில் தொடர்பு உள்ள சத்யம் நிறுவனத்திற்கு கட்டிடம் கட்ட அனுமதி வழங்கினோம். இதில் 15 கோடி நடிகர் சங்கத்தின் நிதி. மீதி 50 கோடி நிதி சத்யம் நிறுவனத்தினுடையது. இதன் மூலம் நடிகர் சங்கத்திற்கு ஆண்டுக்கு 24 லட்சம் வாடகை வரும்.
மொத்தம் 29 வருடம் 11 மாதத்திற்கு லீசுக்கு விடுகிறோம். இதன் முடிவில் 170 கோடி நடிகர் சங்க சொத்து மதிப்பு உயர்ந்திருக்கும். இதை பொதுக்குழுவில் கூடி அனுமதி பெற்று தான் செய்துள்ளோம். நடிகர் சங்கத்தில் இருந்து யாரும் ஒரு பிடி மண்ணை கூட எடுத்து செல்ல முடியாது. ஆனால் விஷால் எனக்கு நோட்டீஸ் அனுப்புவதாக கூறுவது சரியல்ல. விஷாலுக்கு தான் நாங்கள் நோட்டீஸ் அளிக்க வேண்டும்.
பொதுக்குழுவில் கலந்து கொள்ளாமல் இதைப்பற்றி கேள்வி கேட்கக்கூடாது. விஸ்வரூபம் படப்பிரச்சினையில் ஒரு நாள் இரவு முழுவதும் கமலுடன் அமர்ந்து நானும் ராதாரவியும் பேசினோம் என்பது விஷாலுக்கு தெரியவில்லையா. பூச்சி முருகன் என்பவர் அவருக்கு பதவி வழங்கவில்லை என்பதற்காக வழக்கு போட்டுள்ளார். நடிகர் சங்க நிர்வாகிகள் மீது குறை கூறும் அவரை கண்டிக்காமல் விஷால் தவறான தகவலை கூறினால் அவர் மீது தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாங்கள் பொறுமையாக இருக்கிறோம். இனியும் இது போன்று செயல்பட்டால் விஷாலை சங்கத்தில் இருந்து நீக்குவோம் என்று எச்சரிக்கிறேன். விஷால் இவ்வாறு செயல்படுவதற்கு பின்னணி உள்ளதா என்பது எனக்கு தெரியாது.