நடிகர் கொலையில் பிணையில் வெளிவந்த நடிகை சுருதி!!

519

Act

நடிகரை கொலை செய்த வழக்கில் நடிகை சுருதிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. பாளையங்கோட்டையை சேர்ந்தவர் ரொனால்டு பீட்டர் பிரின்சோ. சினிமா தயாரிப்பாளரான இவர், சென்னையில் கடந்த ஜனவரி மாதம் முதல் காணாமல் போனார்.

இதுகுறித்து, பாளையங்கோட்டை பொலிசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், இந்த வழக்கு சென்னை மதுரவாயல் பொலிசிற்கு மாற்றப்பட்டது.

வழக்கை விசாரித்த பொலிசார், ரொனால்ட் பீட்டர் பிரின்சோ கொலை செய்யப்பட்டதை கண்டுபிடித்தனர். அவருடன், மனைவியாக வாழ்ந்து வந்த நடிகை சுருதி என்ற சந்தர்லேகா, உமா சந்திரன், ஜான் பிரின்சன் உட்பட பலர் சேர்ந்து கடந்த ஜனவரி 18ம் திகதி ரொனால்டை கொலை செய்ததாக வழக்குப்பதிந்து, சுருதியை பொலிசார் கைது செய்தனர்.



இதையடுத்து, இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில், சுருதி மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது, ரொனால்டுடன், திருமணம் செய்யாமல் மனைவியாக வாழ்ந்து வந்தேன். அவரை கொலை செய்த வழக்கில் 5வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட ஹானஸ்ட்ராஜ் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் என் மீது பொலிசார் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட ரொனால்ட், உமா சந்திரன், ஜான் பிரின்சன், ஹானஸ்ட்ராஜ் ஆகியோர் ஆன்லைன் தொழிலில் என்னை மேலாளராக பணி செய்ய கட்டாயப்படுத்தினார்கள்.

பின்னர், ஆபாச படங்களில் நடிக்கவேண்டும் என்று எனக்கு தொல்லை கொடுத்தனர். நான் சம்மதிக்காததால், கொலை மிரட்டல் விடுத்தனர். இந்நிலையில், ரொனால்டிடம் இருந்து ஒன்லைன் தொழிலை அபகரிக்க, அவரை உமாசந்திரன், ஜான் பிரின்சன் மற்றும் பலர் கொலை செய்துள்ளது தெரியவந்தது. இதில் என்னையும் சிக்க வைத்துவிட்டனர்.

நான் அப்பாவி, எனக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில் வக்கீல் பி.ஆறுமுகம் ஆஜரானார். இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது, பொலிசார், இதுவரை வழக்கின் குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. எனவே, மனுதாரருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்குகிறேன் என்று உத்தரவிட்டுள்ளார்.