தாவடி பகுதியில் மூவர் மீது சாரமாறியாக வாள்வெட்டு இடம்பெற்றதில் ஒருவருக்கு முதுகு வழியாக வயிற்றுப் பகுதிக்குள் வாள் வந்த கொடுர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த வாள்வெட்டில் தாவடி பகுதியைச் சேர்ந்த ஞானகுமார் (38) பிரதீபன் (30) கஜாகரன் (21 ) ஆகியோரே காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ். தாவடி உப்புமடம் பகுதியில் இன்று திங்கட்கிழமை இரவு 7.30 முதல் 8 மணிக்குள் இந்த வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
குறித்த மூவரும் முச்சக்கரவண்டியில் குறித்த பகுதியில் வந்து கொண்டிருந்த போது, இலக்கத்தகடுகள் அற்ற மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் ஆட்டோவிற்கு சேதம் ஏற்படுத்தியதுடன், மூவர் மீதும் வாள்வெட்டினை மேற்கொண்டுள்ளனர்.
இந்த வாள்வெட்டில் படுகாயமடைந்த நபர்களை ஆட்டோவில் ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார். வாள்வெட்டுக்கு இலக்காகிய நபர்கள் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.