இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் படுதோல்வி : அந்நிய மண்ணில் தொடரும் சோகம்!!

382

Aus

இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா– அவுஸ்திரேலியா அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது. முதலில் நாணய சுழற்சியில் வென்று முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 408 ஓட்டங்கள் குவித்தது.

நேற்றைய 3வது நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 71 ஓட்டங்கள் எடுத்து இருந்தது. தவான் 26 ஓட்டங்களுடனும், புஜாரா 15 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இன்று 4வது நாள் ஆட்டம் நடந்தது. இந்திய அணி தொடர்ந்து விளையாடியது. காயம் காரணமாக தவான் களம் இறங்கவில்லை. புஜாராவுடன் வீராட் கோலி இணைந்து ஆடினார். அவுஸ்திரேலிய வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் இந்திய விக்கெட்டுகள் மளமள என்று சரிந்தன.

117 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டை இழந்தன. வீராட் கோலி (1), ரகானே (10), ரோகித்சர்மா (0) ஆகியோர் விக்கெட்டை ஜோன்சன் கைப்பற்றினார். ஹாசில்வுட் பந்தில் அணித்தலைவர் டோனியும் (0), ஸ்டார்க் பந்தில் அஸ்வினும் (19) ஆட்டம் இழந்தனர்.

காயம் காரணமாக தவான் 6வது விக்கெட் விழுந்தபிறகு களம் வந்தார். பொறுப்புடன் விளையாடி வந்த புஜாரா 7வது விக்கெட்டாக ஆட்டம் இழந்தார். அவர் 43 ஓட்டங்கள் எடுத்தார். அப்போது ஓட்ட எண்ணிக்கை 143 ஆக இருந்தது.

தவான் தனி நபராக கடுமையாக போராடினார். 81 ஓட்டங்களில், அவரும் பெவிலியன் திரும்பினார். இந்திய அணி 64.3 ஓவரில் 224 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதனால் அவுஸ்திரேலியாவுக்கு 128 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. கடைசியாக உமேஷ்யாதவ் 30 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார். ஜோன்சன் 4 விக்கெட் கைப்பற்றினார். ஹாசில்வுட், ஸ்டார்க், லயன் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

இதையடுத்து 128 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி அவுஸ்திரேலியா 2வது இன்னிங்சை தொடங்கியது. வார்னரும், ரோஜர்சும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். வார்னர் 6 ஓட்டங்களிலும், அவரைத் தொடர்ந்து களமிறங்கிய வட்சன் ஓட்டங்கள் ஏதும் எடுக்காமலும் விரைவில் விக்கெட்டை இழந்தனர்.பொறுப்புடன் ஆடிய ரோஜர்ஸ் அரை சதம் கடந்து அணியின் வெற்றிக்கான அடித்தளத்தை ஏற்படுத்தி கொடுத்தார்.

அவர் 55 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இந்த மூன்று விக்கெட்டுகளையும் இஷாந்த் சர்மா கைப்பற்றினார். இதையடுத்து அணித்தலைவர் ஸ்மித்துடன் இணைந்து ஆடிக்கொண்டிருந்த மார்ஷ் 17 ஓட்டங்கள் சேர்த்த நிலையில், யாதவிடம் விக்கெட்டை இழந்தார்.

ஆரோன் வீசிய முறையற்ற பந்தை தட்டிவிட்டு ஓட்டங்கள் எடுக்க முயன்ற ஸ்மித் துரதிர்ஷ்டவசமாக ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்த ஓவரில் ஹாடினை (1) வெளியேற்றினார் யாதவ். இந்த இன்னிங்சில் அபாரமாக பந்து வீசி 122 ஓட்டங்களுக்குள் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

அதன் பின்னர் 24வது ஓவரில் மார்ஷ் பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார். இதனால், அவுஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன்மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அவுஸ்திரேலியா 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.