செட்டிகுளம் – பீடியாபாமத் கிராமத்தில் 17 குடும்பங்களைச் சேர்ந்த 54 பேரின் வீடுகள் வெள்ளத்தில் முற்றுமுழுதாக மூழ்கியுள்ளன.
வவுனியாவில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமாக மல்வத்து ஓயா பெருக்கெடுத்ததனால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த கிராமத்தில் வசித்துவரும் மக்கள் தமது உடமைகள் அனைத்தையும் இழந்து இடம்பெயர்ந்து, தாம் முன்பு இருந்த இடத்திலிருந்து ஒருகிலோ மீற்றர் தொலைவிலுள்ள பளைய பீடியாபாம் காட்டுப் பகுதியில் தறப்பால் கூடாரம் அமைத்து தங்கியுள்ளனர்.
கொட்டும் மழைக்கு ஈடு கொடுக்க முடியாத நிலையில் இருக்கும் தறப்பால் கூடாரங்களுக்குள் குழந்தைள் மற்றும் பெண்கள் முதியவர்கள் உட்பட 54 பேர், காட்டு விலங்குகளின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் வசித்து வருகின்றனர்.
குறிப்பாக கொடிய விஷப் பாம்புகள், யானைகள் அதிகம் காணப்படும் காட்டுப் பகுதிக்குள் மிகுந்த சிரமத்தின் மத்தியில் இவர்கள் தங்கியிருக்கின்றார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் கோரியுள்ளனர்.
இதேவேளை குறித்த மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் தறப்பால்கள் மற்றும் சமைத்த உணவுகளும் வழங்கப்பட்டு வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.