மழையினால் பாதிக்கப்பட்ட வவுனியா மக்களுக்கு உதவ முன்வருமாறு அரச சார்பற்ற நிறுவனங்களிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
வவுனியாவில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக மல்வத்து ஓயா பெருக்கெடுத்து ஓடுகின்றது. இதனால், செட்டிகுளம் பீடியாபார்ம் மற்றும் மடுக்கரை, தம்பனைக்குளம் கிராமங்களில் 10 அடிக்கும் மேலாக வெள்ளநீர் நிரம்பியுள்ளது.
இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பாடசாலை மற்றும் பொது இடங்களில் தங்கியுள்ள மக்களை, பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை உறுப்பினர்களான சி.சிவமோகன், இ.இந்திரராசா ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
1975ஆம் ஆண்டு, படித்த வாலிபர் திட்டத்தின் கீழ் 25 பேருக்கு செட்டிக்குளம் பீடியாபார்ம் கிராமத்தில் காணிகள் வழங்கப்பட்டிருந்தன. இன்று 14 குடும்பங்களைச் சேர்ந்த 54 பேர் அங்கு வசித்து வருகின்றனர்.
கடந்த நாற்பது ஆண்டு காலமாக இக்கிராமத்துக்கான போக்குவரத்து பாதைகள் அமைத்துக்கொடுக்கப்படாமை, மின்சாரம், வீடு, மலசலகூட வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படாமை, காட்டு யானைகளின் தொல்லை, போர்ச்சூழல் என்று பல்வேறு பிரச்சினைகளின்போது இடம்பெயரா இம்மக்கள், இன்று வெள்ளப்பாதிப்பு காரணமாக இடம்பெயர்ந்து அங்குள்ள மேட்டுநில காட்டோரங்களில் தற்காலிக குடில்களை அமைத்து குடியிருக்கின்றனர்.
அத்துடன் இம்மக்களுக்கு சொந்தமான 20 ஏக்கர் காணியை அமைச்சர் மில்ரோய் பெர்ணான்டோ கையகப்படுத்தியிருப்பதால், அமைச்சர் கையகப்படுத்தியுள்ள தமது காணியை மீள பெற்றுத்தருமாறும், ஏனையவர்களுக்கும் குடியிருப்பதற்கு பொருத்தமான மாற்றுக்காணிகளை வழங்குமாறும், இப்பகுதி மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், செட்டிக்குளம் பிரதேசத்தில் வடகாடு, கண்ணாட்டி, கணேசபுரம், துட்டுவாகை கந்தன்குளம் கிராமங்களிலும், மன்னார் சின்ன பண்டிவிரிச்சான், பெரிய பண்டிவிரிச்சான் கிராமங்களிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள மக்களையும் நேரில் சென்று பார்வையிட்டு, அத்தியாவசிய பொருட்களுக்கு தேவையான நிதியுதவியை வழங்கியுள்ளனர்.
வெள்ளநீரால் பெருந்தொகையான வயல்நிலங்களும், மேட்டு நிலப் பயிர்களும் அழிவடைந்துள்ள நிலையில், தொழில்களை இழந்து சேறும் சகதியுமாக உள்ள தற்காலிக கொட்டில்களில் வசித்துவரும் மக்களுக்கு, உலர் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்க அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் முன்வரவேண்டுமென சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் மக்களுக்கு நுளம்புவலைகள், பாய்கள், போர்வைகள் உள்ளிட்ட பொருட்களை வழங்குவதற்கு, கருணை உள்ளம் கொண்டோரை விரைந்து உதவ முன்வருமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.