வவுனியா, கனகராயன்குளத்தில் இம்மாதம் முதலாம் திகதி இடம்பெற்ற கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் வவுனியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கனகராயன்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த முதலாம் திகதி கனகராயன்குளத்தில் உள்ள வீடொன்றில் வவுனியா, காத்தார் சின்னக்குளத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
மேசன் தொழிலாளியான இவர் கனகராயன்குளத்தில் தங்கியிருந்து வீடுகள் மற்றும் கட்டடங்களை ஒப்பந்தத்துக்கு பெற்று கட்டிக் கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் புதுவருட தினத்தன்று அவர் தங்கியிருந்த வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
இந்தக் கொலை தொடர்பான விசாரணைகளை கனகராயன் குளம் பொலிஸார் மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் கொலையுண்டவருடன் பணியாற்றியவர் என சந்தேகிக்கப்படும் வவுனியா சாந்தசோலையைச் சேர்ந்த 21 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும், கைது செய்யப்பட்டவரிடம் மேலதிக விசாரணைகள் நடைபெற்றுவருகின்றன என்றும் கனகராயன் குளம் பொலிஸார் தெரிவித்துள்ளார்.