2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பம்!

444

Vote

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு சற்றுநேரத்திற்கு முன்னர் ஆரம்பமானதுதேர்தல் வாக்களிப்பு மாலை 04 மணிவரை நடைபெறவுள்ளது.

தேர்தல் வாக்களிப்பிற்கு 2014 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் பயன்படுத்தப்படவுள்ளதுடன், இம்முறை தேர்தலில் வாக்களிக்க 1,50,44,490 பேர் தகுதிபெற்றுள்ளனர்.

12,314 நிலையங்களில் தேர்தலுக்கான வாக்களிப்பு இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிடுகின்றது.

வாக்கெண்ணும் உத்தியோகத்தர்கள் உட்பட 02 இலட்சம் அரச ஊழியர்கள் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தேர்தலில் வாக்களிப்பதற்கு அங்கீகரிக்கப்பட்ட ஆவணமொன்றை, வாக்குச் சீட்டுடன் எடுத்துச்செல்வது கட்டாயமானது என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

இதற்கமைய, தேசிய அடையாள அட்டை, அங்கீகரிக்கப்பட்ட கடவுச்சீ்ட்டு, சாரதி அனுமதிப் பத்திரம், ஓய்வூதியம் பெறுநர்களுக்கான அடையாள அட்டை, பிரதேச செயலகங்களால் வழங்கப்பட்ட முதியோருக்கான அடையாள அட்டை, தேர்தல்கள் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டை ஆகியவற்றை வாக்களிப்பதற்கு பயன்படுத்த முடியும்.

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியுள்ள வாக்காளர்கள் தமது அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு தேசிய அடையாள அட்டையுடன், கடவுச்சீட்டை கொண்டுசெல்வது கட்டாயமானது என தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.

அத்தாட்சிப்படுத்தப்பட்ட புகைப்படங்களை வாக்களிப்பதற்கு அங்கீகரிக்கப்பட்ட ஆவணமாக பயன்படுத்த முடியாதென தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, காலையில் சென்று வாக்களிப்பதன் மூலம், வன்முறைகளை தவிர்த்துக்கொள்ள முடியுமென மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம் மொஹமட் கூறினார்.