கடும் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் இன்று 08.01.2015 வவுனியாவில் மிகவும் நேர்மையான முறையில் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு இடம்பெற்றது.
வவுனியா மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்று காலை முதல் வாக்குச் சாவடிகளில் திரண்ட பெருமளவிலான பொதுமக்கள் வரிசை வரிசையாக வாக்களிக்க காத்திருந்தனர். காலைமுதல் திரண்டுவந்த வாக்காளர்கள் தமது வாக்குகளைப் பதிவு செய்திருந்தனர். வவுனியாவின் பல்வேறு பிரதேசங்களிலும் நண்பகலுக்கு முன்னதாகவே (50%) ஐம்பதுசதவீதமான வாக்குகள் பதிவாகியிருந்தன.
எனினும் மாலை நான்கு மணி வரை இடம்பெற்ற வாக்களிப்பில் வவுனியாவின் மொத்த வாக்களிக்கத் தகுதி பெற்ற வாக்காளர்களில் அறுபத்தைந்துக்கும் (65%) அதிக சதவீதமான வாக்குகள் அளிக்கபட்டிருந்ததை வவுனியா தேர்தல்கள் அதிகாரிகள் உறுதிபடுத்தினர்.
வாக்களிப்பு சுமுகமான முறையில் இடம்பெற்ற அதேவேளை வவுனியாவின் பலபகுதிகளிலும் கைக் குண்டுதாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன. வவுனியா நெளுக்குளம் கலைமகள் வித்தியாலயத்துக்கு முன்னால் இனம் தெரியாத நபர்களால் கைக்குண்டு வீசப்பட்ட சம்பவமும் அதேபோன்று வவுனியா நகரில் தமிழ் மகாவித்தியாலய வளாகத்தில் கைக்குண்டு வீசப்பட்ட சம்பவங்களாலும் வவுனியாவின் இயல்பு நிலை பெரிதும் பாதிக்கபட்டுள்ளது.
வாக்குச் சாவடிகளில் இருந்து வாக்குப் பெட்டிகள் வவுனியா செயலகத்துக்கு எடுத்து செல்லும் சமயம் பார்த்தே மேற்படி குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதன்காரணமாக வாக்குபெட்டிகளை எடுத்து செல்வதில் தாமதம் ஏற்பட்டதாக அறியமுடிகிறது.
குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் பின்னர் வவுனியாவின் பல பிரதேசங்களும் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. தேர்தலுக்கு முன் குறிப்பிடும்படியாக எவ்வித வன்முறைகளும் இடம்பெற்றிராத சூழ்நிலை காணப்பட்டதும், ஆளும்தரப்பு மற்றும் எதிர்க்கட்சிகளின் தேர்தல் பிரச்சார கூட்டங்கள் பெருமெடுப்பில் இடம்பெற்றபோது கூட எவ்விதமான வன்முறைச் சம்பவங்களும் பதிவாகியதாக இல்லை.
கடந்த வாரம் வவுனியாவுக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வவுனியா மக்கள் மிகவும் நிம்மதியாக வாழ்வதாகவும் தொடர்ந்தும் அந்த நிம்மதியான வாழ்கையை தான் பெற்றுத்தருவதாகவும் தேர்தல் பிரச்சார மேடையில் முழங்கியதும், பொதுமக்கள் தனக்கு அமோக ஆதரவை வழங்கவேண்டும் என்றும் அறைகூவல் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆனால் தற்போதைய சூழ்நிலையில் வவுனியாவின் இயல்பு நிலையானது தேர்தலின் பின் இடம்பெற்றுள்ள இந்தத் தாக்குதல் சம்பவங்களால் பொதுமக்கள் மனதில் பெரும் பீதியைக்கிளப்பியுள்ளது. போலீசார் மேற்படி சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
அத்துடன் வாக்குகள் எண்ணப்படும் வவுனியா செயலகம் மற்றும் வவுனியா நகர்ப் பகுதிகளில் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் ரோந்து நடவடிக்கைகளும் தீவிரபடுத்தபட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.
நாளை வெளியாகும் தேர்தல்கள் முடிவுகள் எவ்வாறு அமையும் யார் வெற்றிபெறப்போகின்றார் அடுத்த ஆட்சியில் அமரப்போகும் அந்த ஜனாதிபதி, அவரது எதிர்காலத் திட்டங்கள் குறித்த நிலைபாடுகள் தெரியாத நிலையில் வாக்களித்த இலங்கைவாழ் மக்கள் நாளை விடியும் நல்ல பொழுதிற்காக காத்திருக்கின்றனர்.
-பண்டிதர்-