இலங்கையின் 7வது ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவும் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவும் சத்தியப் பிரமாணம்!!

706

Maithri

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியல் யாப்புக்கு இணங்க 08.01.2015 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் ஆணையைப் பெற்ற புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தற்பொழுது உயர் நீதிமன்ற நீதியரசர் கே. ஸ்ரீபவன் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

இந்த நிகழ்வுகள் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று மாலை 6 மணிக்கு ஆரம்பமானது.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள மைத்ரிபால சிறிசேன, தற்போதைய பிரதம நீதியரசர் மொஹான் பிரீஸ் முன்னிலையில் பதவியேற்க முடியாது என்று கூறியுள்ள நிலையிலேயே நீதியரசர் ஸ்ரீபவன் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துள்ளார்.

சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற விசேட நிகழ்வில் மைத்திரிபால சிறிசேன பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

பொதுவாக பிரதம நீதியரசர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்வது வழமையானது. எனினும், பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸின் நியமனம் குறித்து தேர்தல் காலத்தில் கேள்வி எழுப்பிய மைத்திரிபால, உயர் நீதிமன்றின் சிரேஸ்ட நீதியரசர் சிறிபவன் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையிலான அரசியல்வாதிகள் முக்கிய பிரமுகர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, சற்று முன்னர் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

நாட்டின் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும் எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.

ஜனாதிபதியாக உயர் நீதிமன்ற நீதியரசர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டு சில நிமிடங்களில், ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.