வவுனியா கோவில்குளம் இந்துகல்லூரிக்கு அண்மையில் அமைந்துள்ள மின் மாற்றியில் சிக்குண்ட இரண்டு குரங்குகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் இன்றுகாலை 9.30 மணியளவில் இடம்பெற்றது. மின்சாரத்தில் சிக்குண்ட ஒரு குரங்கை காப்பற்ற சென்ற மற்றைய குரங்கும் பரிதாபமாக உயிரை விட்ட சம்பவம் நிகழ்ந்தது.
மேற்படிசம்பவத்தை அடுத்து பாரிய சத்தத்துடன் மின்மாற்றி செயலிழந்து கோவில் குளம் பிரதேசத்துக்கான மின் இணைப்பு துண்டிக்கபட்டது .இரண்டு மணித்தியாலங்கள் துண்டிக்கபட்ட மின்சாரம் மீண்டும் வழமைக்கு திரும்பியது.இருந்தபோதும் மின்சாரம் தாக்கி இறந்த குரங்குகளின் உடலங்கள் தொடர்ந்தும் மின்மாற்றிக்கு அருகில் கிடப்பதாக அங்கிருக்கும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இன்று காலை முதல் இச்செய்தி பிரசுரிக்கப்படும் வரையிலும் மேற்படி குரங்குகளின் உடல்களை அப்புறபடுத்த சம்பந்தபட்ட எந்த தரப்பினரும் எதுவிதமான நடவடிக்கைகளும் எடுக்கபடவில்லை என்பதாக அங்குள்ள பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர் . எனவே சம்பந்தபட்ட மின்சார சபையினரோ அல்லது நகரசபையினரோ துரித நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர் .
மின்மாற்றிக்கு அருகில் இறந்த குரங்குகளின் உடல்கள் கிடப்பதனால் பொதுமக்கள் அருகில் செல்வதற்கு அச்சமடைந்துள்ளமையால் இன்னும் உடல்களை எடுப்பதற்கு அங்குள்ளவர்கள் முயற்சிக்கவில்லை என்பதை சம்பந்தபட்ட தரப்புகளுக்கு தெரியபடுத்துவதாக அங்கிருத்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன .