ஏர் ஏசியா விபத்துக்குள்ளானது எப்படி : வெளியான புதுத் தகவல்!!

436

Airasia

ஏர் ஏசியா விமானம் விபத்துக்குள்ளானது குறித்து புதிய தகவல் ஒன்றை மீட்பு படையின் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் 28ம் திகதி இந்தோனேஷியாவிலிருந்து சிங்கப்பூருக்கு 162 பயணிகளுடன் சென்ற QZ8501 விமானம் ஜாவா கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் அனைவரும் பலியாகியுள்ளனர். இதனையடுத்து நடந்த மீட்பு பணியில் இதுவரை விமான விபத்திலிருந்து 40க்கும் மேற்பட்ட உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மேலும் தற்போது கருப்பு பெட்டியும், அதன் மற்றொரு பாகமும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக இந்தோனேஷிய அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் விமானம் விபத்துக்குள்ளானது எப்படி என்பது தொடர்பாக புதிய தகவல் ஒன்றை மீட்புப் படையின் ஒருங்கிணைப்பாளரான எஸ்.பி.சுப்ரியாடி வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது,

இதுவரை மீட்கப்பட்ட விமானத்தின் பாகங்களில் ஏற்பட்டுள்ள சிதைவை ஆய்வு செய்து பார்த்த வகையில், கடல் பகுதியை நோக்கி வேகமாக கீழே இறங்கியபடி பறந்தபோது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட புவி ஈர்ப்பு விசையின் மாற்றத்தால் விமானத்தின் கெபின் பகுதியில் அழுத்தம் அதிகமாகி இருக்கலாம்.

அந்த அழுத்தத்தை சமன்படுத்துவதற்குள் தரையை நோக்கி பாய்ந்த விமானம் கடலின் மீது மோதி விழுந்ததில் அது வெடித்து சிதறியிருக்கலாம் என கூறியுள்ளார்.

இதற்கு சான்றாக விமானத்தின் இடதுப் புற இறக்கை அதிகமாக சிதைந்துள்ளதையும், சம்பவ தினத்தன்று அப்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த சிலர் பயங்கர வெடிச் சத்தத்தை கேட்டதாகவும், கடல் பகுதியின் மேற்பரப்பில் இருந்து புகை வந்ததை கண்டதாகவும் கூறியதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.