இங்கு இன்று ஒன்று கூடியிருக்கும் குடும்பங்கள் நீண்டகால முரண்பாடு காரணமாக இலங்கை அன்னையின் இதயத்தை கிழித்த பல இன்னல்களுக்கு முகம் கொடுத்தவர்களாக உள்ளனர். இலங்கை வாழ் எவராலும் இவ்விடத்தின் துன்பம் நிறைந்த சம்பவங்களை, கால வரையறைகளை மறக்க முடியாது என்று பரிசுத்த பாப்பரசர் தெரிவித்தார்.
இருப்பினும் மருதமடு அன்னை என்றுமே உங்களுடன் உறுதுணையாக இருக்கின்றார். அனைத்து வீடுகளிலும் அவள் தான் அன்னை. வடுக்களோடு வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒப்புரவு சக வாழ்வை மீளப்பபெறுவதற்கு முயற்சிக்கும் ஒவ்வொருவரிலும் அவள் வீற்றிருக்கின்றாள் என்றும் பரிசுத்த தந்தை குறிப்பிட்டார்.
இலங்கையில் சிங்கள் மற்றும் தமிழ் மொழி பேசும் மக்களாக மரியன்னையோடு இணைந்து அவருடைய பரிந்து பேசுதலின் வழியாக அழிந்து போன ஒற்றுமையை மீள கட்டியெழுப்புவோம் என மனம் திறந்து மன்றாடுவோம். உங்களோடு இணைந்து மரியன்னையின் இல்லத்தில் நிற்பதற்கு கிடைத்த சந்தர்ப்பத்தை இட்டு மகிழ்கின்றேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மடு தேவாலயத்துக்கு இன்று மாலை விஜயம் செய்த பாப்பரசர் அங்கு அன்னை திருத்தலத்தில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
படங்கள்: நிருஜன்செல்வநாயகம்