சர்வதேச ஒருநாள் போட்டியில் அதிவேகமாக சதம் அடித்து தென் ஆபிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் உலக சாதனை படைத்துள்ளார்.
இவர் 31 பந்துகளில் சதம் அடித்தார். இதற்கு முன்பு நியூசிலாந்து வீரர் கோரி அண்டர்சன் 36 பந்துகளில் சதம் அடித்திருந்ததே சாதனையாக இருந்தது.
அவரின் உலகசாதனையை இன்று ஜோஹன்னஸ்பர்க்கில் நடந்த மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் முறியடித்து விட்டார் டிவில்லியர்ஸ்.
டிவில்லியர்ஸ் வானவேடிக்கை காட்டிய இந்தச் சதத்தில் 11 ஆறு ஓட்டங்களும், 8 நான்கு ஓட்டங்களும் அடங்கும்.
இந்தப் போட்டியில், டிவில்லியர்ஸ் மொத்தம் 16 ஆறு ஓட்டங்களுடனும், 9 நான்கு ஓட்டங்களுடனும் 44 பந்துகளில் 149 ஓட்டங்கள் குவித்தார்.
இன்றைய போட்டியில் டிவில்லியர்ஸ் 16 பந்துகளில் அரைச் சதத்தைக் கடந்து அதிலும் புதிய உலக சாதனை படைத்து அசத்தினார்.
இதற்கு முன்னர் இலங்கை அணி வீரர் சனத் ஜெயசூரிய 1996ம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 17 பந்துகளில் 50 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டதுவே இதுவரை சாதனையாக இருந்தது.
மேலும் இன்றைய போட்டியில் மொத்தமாக 16 ஆறு ஓட்டங்களை அடித்ததன் மூலம் இந்திய வீரர் ரோஹித் ஷர்மாவினால் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒருநாள் போட்டி ஒன்றில் பெறப்பட்ட அதிகூடிய(16) ஆறு ஓட்டங்கள் என்ற சாதனையையும் சமப்படுத்தியுள்ளார்.