ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு முழுமையான மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் நேற்று புதன்கிழமை அறிவித்துள்ளது. அரசியலமைப்பின் 34 ஆவது சரத்தின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தியே ஜனாதிபதி சிறிசேன இந்த மன்னிப்பை வழங்கியிருப்பதாக ஜனாதிபதி செயலகத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம், சரத் பொன்சேகா இழந்திருந்த சகல சிறப்புரிமைகளையும் எந்தச் சட்டச் சிக்கலுமின்றிப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளராகப் போட்டியிட்டிருந்த சரத் பொன்சேகா, அத்தேர்தலில் தோல்வியடைந்ததை அடுத்து இராணுவச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்ததுடன், அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நீதிமன்ற விசாரணைகளின் இறுதியில் வழங்கப்பட்ட தீர்ப்புகளுக்கு அமைய அவரது பதவி நிலை மற்றும் பதக்கங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டன. அதுமட்டுமல்லாது, அவரது பிரஜாவுரிமை மற்றும் ஓய்வூதியம் என்பனவும் பறிக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. இராணுவ சேவையில் இருந்து ஓய்வுபெறும்போது சரத் பொன்சேகா ஜெனரல் பதவி நிலையுடன் கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரியாகவும் பதவி வகித்திருந்தார்.