முடங்கி கிடக்கும் 200 புதுப்படங்களை திரையிட நடவடிக்கை : திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர்!!

406

Dhanu

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் சென்னையில் நடந்தது. இதில் தலைவராக கலைப்புலி எஸ். தாணு வெற்றி பெற்றார். துணைத் தலைவர்களாக தேனப்பன், கதிரேசன் ஆகியோரும் பொருளாளராக டி.ஜி.தியாகராஜனும் தேர்வானார்கள்.

செயலாளர்களாக டி.சிவா, ராதாகிருஷ்ணன் ஆகியோர் போட்டியின்றி தேர்வானார்கள்.
தலைவராக தேர்வான கலைப்புலி எஸ்.தாணு அளித்த பேட்டி வருமாறு..

தயாரிப்பாளர் சங்கம் அறவழியில் அமைதி வழியில் இழந்த பெருமையை மீட்டு இருக்கிறது. நம் முன்னோர்கள் ஏ.வி. மெய்யப்ப செட்டியார், எஸ்.எஸ்.வாசன், டி.ஆர். சுந்தரம், எல்.வி.பிரசாத், நாகிரெட்டி, ஏ.எல்.சீனிவாசன், டி.ராமானுஜம், டி.வி.எஸ். ராஜு போன்றோரால் காலம் காலமாக கட்டி காப்பாற்றப்பட்ட திரையுலகினரின் மாண்பினை புதிதாக தேர்வு பெற்றுள்ள நிர்வாகிகளாகிய நாங்கள் பேணி காத்திடுவோம்.

தேர்தலில் போட்டியிட்டவர்களுக்கும் மனுக்களை திரும்ப பெற்றவர்களுக்கும் போட்டியிட்டு வெற்ற வாய்ப்பை இழந்த சகோதரர்களுக்கும் சங்கத்தில் பொறுப்பினை தந்து ஒரு சேர கலையுலகை காப்போம்.

எதிர் காலத்தில் தேர்தல் அறிக்கையில் சொன்ன அனைத்து செயல் திட்டங்களையும் செயல் படுத்த நாளும் பணியாற்றுவோம். வெளிவராமல் முடங்கி கிடக்கும் 200க்கும் மேற்பட்ட படங்களை திரையிட நடவடிக்கை எடுத்து தயாரிப்பாளர் நலனை பாதுகாப்போம்.

இதுவரை யாரும் செய்திராத சாதனைகளை செய்து சிறு பட தயாரிப்பாளர்களுக்கு கலங்கரை விளக்கமாக இருப்போம். உலகில் உள்ள அனைத்து திரையுலக சங்கங்களுக்கும் முன்னோடி முதன்மை சங்கம் என பெயர் எடுக்க உழைப்போம். எங்கள் காலம் தமிழ் திரையுலகின் பொற்காலம் என சொல்லத்தக்க வகையில் பணியாற்றுவோம்.

தயாரிப்பாளர்கள் அனைவரும் இன்று மாலை 6 மணிக்கு நூற்புசாலையில் உள்ள ராதா பார்க் இன் ஹோட்டலில் நடைபெறும் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டு திரையுலகின் மாண்பினை பேணி காத்திடவும் ஒன்று படவும் சபதம் ஏற்போம் என்று அவர் கூறினார்.