முல்லைத்தீவு மீனவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் – வினோ எம்பி!!

458

vino_noharathalingam

தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடும் முல்லைத்தீவு மீனவ சங்க பிரதிநிதிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்களின் போராட்டத்தை நிறுத்துவதற்கு மாவட்ட அரசாங்க அதிபர் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த திங்கட்கிழமையில் இருந்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து முல்லைத்தீவு மீனவர் கூட்டுறவுச்சங்க சமாசத்தின் முக்கியஸ்தர்களும்,மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகளும் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பாராளுமன்ற உறுப்பினராகிய நான் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நேரில் சென்று அவர்களின் குறைகளை கேட்டரிந்து கொண்டேன்.

இது வரை எந்த ஒரு அரசாங்க அதிகாரிகளும் தம்மை வந்து பார்வையிடவில்லை என அவர்கள் என்னிடம் சுட்டிக்காட்டியதையடுத்து அரசாங்க அதிபரை சந்தித்து உண்ணாவிரதத்தில் ஈடுபடும் சங்க பிரதிநிதிகளுடன் உரையாடுவதற்கு ஒழுங்கு செய்து கொடுத்தேன்.

தமது கோரிக்கைகளை நேரிலும் எழுத்திலும் விரிவாக அரசாங்க அதிபரிடம் எடுத்துக்கூறிய மீனவ பிரதிநிதிகள் வெளிமாவட்ட மீனவர்களின் சட்ட விரோத மீன் பிடியினையும், அத்து மீறிய குடியேற்றத்தையும் உடன் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளாது விட்டால் தமது போராட்டத்தை நிறுத்தப்போவதில்லை என உறுதியுடன் அவர்கள் தெரிவித்தனர்.

இவ்விடையம் தொடர்பாக மேலும் கருத்துத்தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் மீன் பிடித்துரை அமைச்சின் பனிப்புரைகளை மாவட்ட மீன் பிடி திணைக்களமே பொலிசாரே அமுல்படுத்துவது இல்லை எனவும் பாதுகாப்புத் தரப்பினர் அதிகாரம் மிக்கவர்களாக செயற்படுவதினாலும் ஒத்துழைப்பு வழங்குவதினாலும் வெளி மாவட்ட மீனவர்கள் சுதந்திரமாகவும் சட்டத்திற்கு முரணாகவும் தொழிலில் ஈடுபடுகின்றார்கள் என கூறினார்.

அரசாங்க அதிபர் தலைமையிலான குழுவினருக்கும் மீனவ பிரதிநிதிகளுக்குமிடையிலான நீண்ட கலந்துரையாடலின் பின் அரசாங்க அதிபர் கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட தரப்பினிருக்கு அறிவித்து ஏற்ற ஒழுங்குகளை செய்வதாகவும் கூறிச் சென்றதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் மேலும் தெரிவித்தார்.