நேற்று பிரபல தமிழ் இணையத்தளமான தமிழ்வின் இணையத்தளத்தில் “மாணவர்களை அறையில் வைத்து பூட்டிவிட்டு மது அருந்திய ஆசிரியர்கள்” என்ற தலைப்பில் வவுனியா விபுலானந்தாக் கல்லூரி தொடர்பான செய்தி ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து பல இணையத்தளங்கள் இச் செய்தியை பிரசுரித்திருந்தன.
இச் செய்தி தொடர்பாக வவுனியா நெற் இணையத்தளத்தை தொடர்புகொண்ட பாடசாலை அதிபர் திரு.தனபாலசிங்கம் அவர்கள்,
இச் செய்தி முற்றிலும் தவறான செய்தியாகும். அடிப்படை ஆதாரமற்ற இச் செய்தியை வெளியிட்ட இணையத்தளங்களை வன்மையாக கண்டிக்கின்றோம். இச் செய்தியால் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் உட்பட நலன்விரும்பிகள் அனைவரும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம்.
இது போன்ற தவறான செய்திகளை வெளியிட்டு பாடசாலையின் கல்வி வளர்ச்சியை தடுக்க முனைவது ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும். இச் செய்திக்கு மறுப்பு அறிக்கையை இவ் இணையத்தளம் வெளியிடாதுவிடின் அனைத்து ஆசிரியர்களும், மாணவர்களும், பெற்றோருடன் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தை மேற் கொள்ளவுள்ளோம் என்று தெரிவித்தார்.