மன்னிப்பு கேட்ட ஜடேஜா, ரெய்னா !!

430

raina jedeja

மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான போட்டியின்போது மைதானத்தில் வைத்து வாய்ச் சண்டையில் ஈடுபட்டதற்காக முதலில் சண்டையில் இறங்கிய ரவீந்திர ஜடேஜாவும், பதிலுக்கு வாயை விட்ட சுரேஷ் ரெய்னாவும் மன்னிப்பு கேட்டுள்ளனர்.

சமீபத்தில் நடந்த மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான போட்டியின்போது கேட்ச் பிடிப்பது தொடர்பாக ஜடேஜாவுக்கும், ரெய்னாவுக்கும் இடையே சண்டை ஏற்பட்டு விட்டது.

சீனியர் வீரரான ரெய்னாவை மைதானத்தில் வைத்தே ஜடேஜா திட்ட, பதிலுக்கு ரெய்னா திட்ட களேபரமாகி விட்டது. கேப்டன் கோஹ்லி தலையிட்டு இருவரையும் அமைதிப்படுத்தினார். இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இருவரும் மன்னிப்பு கேட்டுள்ளனர்.

இதுகுறித்து மூத்த பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், நடந்த சம்பவம் தொடர்பாக அணி மேலாளரிடம் ஜடேஜாவும், ரெய்னாவும் பேசியுள்ளனர். நிபந்தனையற்ற மன்னிப்பும் கேட்டுள்ளனர். இதுமாதிரி மறுபடியும் நடக்காது என்று உறுதியளித்துள்ளனர். இருவரும் தேசிய கிரிக்கெட் வீரர்கள் என்ற தங்களது தகுதியை மறக்காமல் இனி நடந்து கொள்வோம் என்றும் சொல்லியுள்ளனர் என்றார்.

இதற்கிடைய இந்த விவகாரம் குறித்து அறிக்கை அளிக்குமாறு அணி மேலாளர் எம்.வி.ஸ்ரீதரிடம் கிரிக்கெட் சபை கூறியுள்ளது. இருப்பினும் இரு வீரர்கள் மீதும் நடவடிக்கை எதுவும் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணி வீரர்கள் இடைக்கிடை மைதானத்தில் இது போன்ற வாய்ச்சண்டையில் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது.