வீதி விபத்தில் உயிரிழந்த இளைஞர் ஒருவரின் கைகள் ரயில் விபத்தில் இரு கைகளையும் இழந்த 30 வயது நபருக்கு கேரளாவில் நடந்த அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது.
விபத்துக்களில் இறந்தவர்களின் கண், இருதயம், சிறுநீரகம், நுரையீரல், எலும்பு போன்ற உறுப்புகளை தானம் செய்வதை போல கையையும் தானம் செய்யலாம்.
உலக அளவில் அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் நாடுகளில் இதுவரை 110 பேருக்கு கை மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவில் முதல்முறையாக கொச்சியில் அம்ரிதா மருத்துவ விஞ்ஞானக் கழக மருத்துவமனையின் பிளாஸ்டிக் சேஜரி பிரிவின் தலைமைமருத்துவர் சுப்ரமணிய ஐயர் தலைமையில் மனு என்பவருக்கு கை மாற்று அறுவை சிகிச்சை நடந்துள்ளது
20 மருத்துவர்களுடன் 16 மணிநேரம் நடந்த இந்த சிகிச்சையில், ரயில் விபத்தில் இழந்த இரண்டு கைகளையும் திரும்ப பெற்றுள்ளார்.
மனுவை அறுவை சிகிச்சை முடிந்தபின் செய்தியாளர்களிடம் அறிமுகம் செய்து வைத்த மருத்துவர் சுப்ரமணிய ஐயர் பேசுகையில், பிறவியிலோ, வாகன விபத்திலோ, இயந்திரத்தில் சிக்குவதாலோ மணிக்கட்டு பகுதியை ஒருவர் இழந்துவிட்டால் எந்த வேலையையும் செய்ய இயலாது.
அவருக்கு “ரி பிளான்டேஷன்’ என்ற முறையில் கையை பொருத்தலாம். இதற்கு துண்டான கையை பிளாஸ்டிக் கவரில் சுற்றி, ஐஸ் பெட்டிக்குள் வைத்து கொண்டு வரவேண்டும்.
மற்றொன்று “டிரான்ஸ் பிளான்டேஷன்’ என்ற முறையில், கையை தானமாக பெற்றும் பொருத்த முடியும்.
இதற்கு “மைக்ரோ சேஜரி’ என்ற தொழில்நுட்பம் உதவுகிறது. ரத்தம், சிறுநீரகம் போல கை தானமாக கிடைத்தால் போதும்.
மேலும்,மூளைச் சாவு அடைந்தவரின் கையை எடுத்து, தேவைப்படுவோருக்கு பொருத்துவதன் மூலம், அவருக்கு “புதிய கை’ கிடைக்கிறது. இதனால் கையை இழந்தவர்கள் பெரிதும் பயனடைவர் என்று தெரிவித்துள்ளார்.