சச்சின் மகன் அணியில் இருந்து நீக்கம்..!

491

sachin

சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் மும்பை 14 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் அணியிலிருந்து திடீரென நீக்கப்பட்டுள்ளார்.

அப்பா வழியில் சின்னப் பிள்ளையிலிருந்தே கிரிக்கெட் ஆடி வருகிறார் அர்ஜூன். இவர் தற்போது 14 வயதுக்குட்பட்டோருக்கான அணியிலிருந்து திடீரென நீக்கப்பட்டுள்ளமைக்கான காரணம் மோசமான போர்ம் என்று கூறியுள்ளனர்.

மும்பை அணிக்கான 30 பேர் கொண்ட பட்டியலில் அர்ஜூன் டெண்டுல்கர் பெயர் இடம்பெறவில்லை. 14 வயதுக்குட்பட்டோருக்கான மேற்கு மண்டல கிரிக்கெட் போட்டிகளில் அர்ஜூன் டெண்டுல்கர் மும்பைக்காக ஆடியிருந்தார்.

கிண்ணத்தை அந்த அணிதான் வென்றது. ஆனால் அர்ஜூன் டெண்டுல்கருக்கு ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பளிக்கவில்லை.

சச்சினின் மகன் என்ற ஒரே காரணத்திற்காக அர்ஜூனை அணியில் சேர்த்து விட்டதாக பல பெற்றோர்கள் குமுறல் வெளியிட்டிருந்தனர். புகார்களும் கூறியிருந்தனர் என்பது நினைவிருக்கலாம்.

இந்த நிலையில்தான் தற்போது அர்ஜூனை அணியிலிருந்து நீக்கியுள்ளது தேர்வாளர்கள் குழு. தேர்வுப் போட்டிகளில் அர்ஜூன் டெண்டுல்கர் ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை. இதுவே அவருக்கு ஆப்பாக மாறி விட்டது.

இதுகுறித்து தேர்வுக் குழுவில் இடம் பெற்றிருந்த ஒருவர் கூறுகையில் சரியாக விளையாடாவிட்டால் அணியில் இடம் கிடையாது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். மீண்டும் அவர் சிறப்பாக விளையாடி பார்முக்குத் திரும்பினால் மும்பை அணிக்கு தேர்வு செய்யப்படுவார் என்றார்.

மேலும் சச்சின் மகன் என்பதற்காக இலகுவாக அணியில் நுழைந்து விடலாம் என்று நினைத்து விடக் கூடாது என்பதற்காகவும் இந்த அதிரடி முடிவை தேர்வாளர்கள் எடுத்தனராம்.