இங்கிலாந்தைச் சேர்ந்த ஒருவருக்கு தாய்மையடைவதற்குத் தேவையான கர்பப்பையின் அனைத்து உடற்கூறுகளும் அமைந்திருப்பது மருத்துவ உலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்த 37 வயதான தொழிலதிபர் ஒருவருக்கு கடந்த சில நாட்களாக சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியாகியுள்ளது. இதனால் கடும் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக மருத்துவனைக்குச் பரிசோதனைக்காக சென்றுள்ளார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு சிறுநீர்ப்பையில் புற்று நோய் இருக்கலாம் என்று சந்தேகித்து பரிசோதனை நடத்தியுள்ளனர்.
ஆனால் அந்த பரிசோதனை முடிவில் அவருக்கு புற்று நோய்க்கான அறிகுறி எதுவும் தெரியாததால் குழப்பமடைந்த மருத்துவர்கள் எம்.ஆர்.ஐ. கருவி மூலம் அவரது உடலை முழுமையாக ஸ்கேனிங் செய்து பரிசோதித்தனர்.
ஸ்கேன் செய்யப்பட்ட படங்களைப் பார்க்கும்போது அவருக்கு கர்பப்பை இருப்பதைப் பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மேலும், கர்பப்பை மட்டுமல்லாமல் கர்ப்பப்பை வாய், சினைப்பை, கருமுட்டை, பெலோபியன் குழாய் என்று ஒரு தாய்மை அடையக் கூடிய பெண்ணிற்குத் தேவையான அனைத்தும் அவருக்கு இருந்தது மருத்துவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பின்னர் அவரிடம் சிறுநீரில் ரத்தம் வந்ததற்கு மாதவிடாய் தான் காரணம் என கூறிய மருத்துவர்கள் விடலை பருவத்திலிருந்தே அவருக்கு விந்து மற்றும் சிறுநீரிலிருந்து ரத்தம் வெளியாகியுள்ளதை விளக்கியுள்ளனர்.
இந்நிலையில் தனது வாழ்க்கை குறித்து அலிசன் ஸ்மித் ஸ்கொயர் என்ற பத்திரிகையாளரிடம் அவர் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறுகையில், சிறுவனாக இருந்த போது எனக்கு எந்த பிரச்சனையும் இருந்ததில்லை.
ஆனால் என்னுடைய இருபதுகளில் உடலுறவின் போதும், உடலுறவுக்கு பின்பும் மந்தமான வலியை உணர்ந்தேன்.
தற்போது பரிசோதனை முடிவுகள் நான் ஆண் மற்றும் பெண் தன்மையோடு இருப்பதைக் காட்டுகிறது. ஆனால் நான் ஒரு ஆணாக தான் வாழ்ந்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
அந்த நபருக்கு விரைவில் மான்செஸ்டர் பல்கலைக் கழக மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கர்ப்பப்பையை அகற்ற மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.
மேலும், அதனை அகற்றிய பின் ’மெனோபஸ்’ எனப்படும் மாதவிடாய் சுழற்சி நின்ற நிலையை அவர் அடைவார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.