25 அனாதைக் குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று ஹன்சிகா கூறினார். தனது ஒவ்வொரு பிறந்த நாளிலும் குழந்தைகளை ஹன்சிகா தத்தெடுக்கிறார். அவருக்கு தற்போது 23 வயது ஆகிறது. இதுவரை 25 குழந்தைகளை தத்தெடுத்து இருக்கிறார். இதுகுறித்து ஹன்சிகா கூறியதாவது..
நான் ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறேன். 25 அனாதை குழந்தைகளுக்கு அம்மாவாக இருக்கிறேன். இது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. சினிமாவில் பிசியாக நடிக்கிறேன். நிறைய மன உளைச்சல்களும் உள்ளன.
இதையெல்லாம் அந்த குழந்தைகளின் முகத்தை பார்த்து மறக்கிறேன். வாரம் ஒரு நாள் குழந்தைகளுக்காக ஒதுக்குகிறேன். அன்று குழந்தைகளுடனேயே இருக்கிறேன். அவர்களுடன் விளையாடுகிறேன். அவர்களுடனேயே சாப்பிடுகிறேன். சூட்டிங் கஷ்டங்களையெல்லாம் அவர்களுடன் இருக்கும் போது மறந்து விடுகிறேன்.
நிறைய பொம்மைகள் வாங்கி கொடுப்பேன். அந்த பொம்மைகளை பார்த்து குழந்தைகள் கண்களில் தெரியும் மகிழ்ச்சியில் மெய்மறந்து போகிறேன்.
ஆதரவற்ற குழந்தைகளுக்கும் முதியோர்களுக்கும் இல்லம் கட்ட வேண்டும் என்பது எனது லட்சியம். இதற்காக மும்பை புறநகர் பகுதியில் இடம் வாங்கி போட்டுள்ளேன். விரைவில் அந்த இல்லத்தை கட்டி குழந்தைகளை அங்கு தங்க வைப்பேன் என்று ஹன்சிகா கூறினார்.