மேலைத்தேய மோகத்தில் விடுபட்டு தமிழரின் பாரம்பரிய வாத்தியங்களை இசைத்து பொது நிகழ்வுகளை சிறப்பிக்க வேண்டும் என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி பத்மநாதன் சத்தியலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.
வடக்கு மாகாண சுகாதார அமைச்சரின் குறித்தெதுக்கப்பட்ட நிதியிலிருந்து வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரிக்கு இன்னிய (பாரம்பரிய இசைக்கருவிகள்) உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
தமிழரின் பாரம்பரிய கலையை பிரதிபலிக்கும் உடுக்கை, தவில், நாதஸ்வரம், பறை, புல்லாங்குழல், கொம்பு போன்ற உபகரணங்கள் அமைச்சரினால் பாடசாலை அதிபரிடம் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டது.
இதன்போது கருத்து வெளியிட்ட அமைச்சர், இன்று நம்மில் பலர் எமது பாரம்பரிய கலையை மறந்து ஆங்கிலேய கலாசாரத்தில் மோகம் கொண்டுள்ளோம். இதனால்தான் பாண்ட் வாத்தியங்களில் கவனத்தை செலுத்தியுள்ளோம். எமது மொழி, கலாசாரம் மிகத்தொன்மை வாய்ந்தது. இனிவரும் காலங்களில் இவ்வாறான இன்னிய வாத்தியங்களை இசைத்து பொது நிகழ்வுகளை நடாத்த வேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.