வவுனியா பொலிஸாரை கண்டித்து வவுனியா நகரசபை ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு!!

509

வவுனியா பொலிஸாரின் நடவடிக்கையை கண்டித்து வவுனியா நகரசபை ஊழியர்கள் இன்றுமுதல்(11.02) கால வரையறையற்ற பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 9ஆம் திகதி வவுனியா நகரப்பகுதியில் டெங்கொழிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுத்த நகர சபை ஊழியர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்த நபரொருவர் தொடர்பாக, பொலிஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்தே இந்த பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பாக நகர சபை ஊழியர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், ‘கடந்த 9ஆம் திகதி நாங்கள் டெங்கொழிப்பு வேலைத்திட்டத்தில் ஈடுபட்டபோது, வீதியோர மரக்கறி வியாபாரிகளை அகற்றினோம். இதன்போது தனிநபரொருவர் அதனை புகைப்படமெடுத்தார்.

இது தொடர்பாக நாங்கள் விளக்கம் கோரியபோது, புகைப்படமெடுத்தவர் தகாத வார்த்தைகளை பிரயோகித்துள்ளார்.
இதனால் குறித்த நபரை வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைத்தோம்.

ஆனால், குறித்த நபர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத வவுனியா பொலிஸார் அதற்கு மாறாக சந்தேகநபரை பொலிஸாரிடம் ஒப்படைக்கச் சென்ற எங்களை முற்பகல் 11 மணியிலிருந்து மறுநாள் அதிகாலை 12.30 மணி வரை பொலிஸ் நிலையத்தில் நீராகாரம் கூட வழங்காது தடுத்து வைத்திருந்து பின்னர் பிணையில் செல்ல அனுமதித்தனர்.

இந்நிலையில் சந்தேகநபரை விடுவித்து, நகர சபை ஊழியர்களை தடுத்து வைத்திருந்த வவுனியா பொலிஸாரை கண்டித்தும் குறித்த சம்பவத்திற்கு நீதி கேட்டும் இந்த பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளோம்’ என தெரிவித்தார்.

நகரசபை ஊழியர்களை அச்சுறுத்தியமை, அவமதித்தமை, கடமைகளை செய்யவிடாமல் தடுத்தமை, 12 மணித்தியாலங்களுக்கும் அதிகமான நேரம் நீராகாரமுமின்றி தடுத்து வைத்திருந்தமை, சந்தேகநபரை விசாரணையின்றி விடுவித்தமை ஆகிய ஐந்து விடயங்களை முன்னிலைப்படுத்தி இடம்பெறும் இந்த பணிப் பகிஷ்கரிப்பில் வவுனியா மாவட்ட பொது சுகாதார பரிசோதகர்கள், நகரசபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதார பிரிவினரும் கலந்துகொண்டுள்ளனர்.

1 2