வவுனியா நகரசபை உத்தியோகத்தர்கள் மேற்கொண்டு வந்த கவனயீர்ப்பு போராட்டம் மக்களின் நலன் கருதி கைவிடப்படுவதாக வவுனியா நகரசபை உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.
டெங்கு ஒழிப்பை முன்னிட்டு கடந்த திங்கட்கிழமை வவுனியா சந்தைப் பகுதியில் தெருவோர வியாபாரத்தில் ஈடுபட்டவர்களை அகற்றிய போது அப் பகுதியில் மரக்கறி கொள்வனவில் ஈடுபட்ட இளைஞன் ஒருவன் தனது கையடக்க தொலைபேசியில் அதனை புகைப்படம் எடுக்க முற்பட்டதையடுத்து ஏற்பட்ட முரண்பாடு பொலிஸ் நிலையம் வரை சென்றிருந்தது.
இந் நிலையில் குறித்த இளைஞனை பொலிஸார் விடுதலை செய்து நகரசபை ஊழியர்களை கைது செய்து தடுத்து வைத்திருந்தமையை கண்டித்தும், பொலிஸ் நிலையத்தில் நீராகாரம் இன்றி 12 மணிநேரம் தடுத்து வைத்திருந்தமை, நகரசபை ஊழியர்களை அச்சுறுத்தியமை, நியாயம் கேட்டு வந்த அரச உத்தியோகத்தர்களை அவமதித்தமை மற்றும் குறித்த இளைஞனை விசாரணை இன்றி விடுவித்தமை என்ற காரணங்களை முன்வைத்து காலவரையறையற்ற உண்ணா விரதப்போராட்டத்தில் நேற்று காலை முதல் வவுனியா நகரசபை உத்தியோகத்தர்கள் ஈடுபட்டு வந்தனர்.
இதனையடுத்து இன்றைய தினம் நகரசபைக்கு சென்ற வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் லசந்த விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடினர்.
இச் சம்பவம் தொடர்பில் பொலிசார் பக்கச் சார்பின்றி விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் நகரசபையினா் தவறாக விளங்கிக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்த சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நகரசபையின் செயற்பாடுகளுக்கு கடந்த காலங்களில் பொலிசார் உதவிகளை செய்து வந்ததைப் போன்று இனிவரும் காலங்களிலும் தொடர்ந்து வழங்கும் எனவும் தெரிவித்ததுடன் போராட்டத்தை கைவிடுமாறும் கோரியிருந்தார்.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இன்று காலை 10.30 மணியளவில் போராட்டத்தைக் கைவிட்டனர்.