ஊழலில் முதலிடத்தில் இந்தியா – சர்வதேச ஆய்வில் தகவல்!!

868

corruption

 

 

 

 

 

 

 

உலகளாவிய ரீதியில் நடத்தப்பட்ட “ஊழல் அளவுக்கோல் 2013” என்ற கருத்துக்கணிப்பில் இந்தியா முதல் இடத்தை பிடித்துள்ளது. “டிரான்ஸ்பெரன்சி இண்டர்நேஷனல்” என்ற அமைப்பு உலகில் உள்ள 107 நாடுகளில் வசிக்கும் ஒரு இலட்சத்து 14 ஆயிரத்து 270 பேரிடம் இந்த கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது.

இந்த கருத்துக்கணிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் ஊழல் பன்மடங்கு பெருகி விட்டதாக 70 சதவீதம் இந்தியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஊழலை ஒழிக்க இந்திய அரசு போதுமான முயற்சி எடுப்பதாக தெரியவில்லை என இவர்களில் 68 சதவீதம் பேர் கருதுகின்றனர்.

86 சதவீதம் பேர் இங்குள்ள அரசியல் கட்சிகள் ஊழல் கறை படிந்தவை என்று கூறுகின்றனர். ஆசிய அளவில் மட்டுமின்றி உலகளாவிய ரீதியிலும் ஊழலை எதிர்க்கும் நடவடிக்கையில் மக்களின் நம்பிக்கையை சம்பாதிக்க இந்தியா தவறி விட்டது.

உலகின் தனிப்பெரும் சக்தியாக மாற நினைக்கும் இந்தியா ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளால் உள்நாட்டு மக்களின் நம்பிக்கையை காப்பாற்ற தவறி விட்டதாக எங்கள் கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரியவந்துள்ளது என டிரான்ஸ்பெரன்சி இண்டர்நேஷனல் அமைப்புக்கான ஆசிய பிராந்திய பிரதிநிதி ருக்ஷானா நானயக்கார தெரிவித்துள்ளார்.

உலகளாவிய அளவில் தங்களது காரியத்தை குறுக்கு வழியில் சாதிக்க 27 சதவீதம் பேர் கடந்த 12 மாத காலத்தில் யாருக்காவது இலஞ்சம் தந்துள்ளனர். ஆனால், இந்தியாவில் மட்டும் 54 சதவீதம் பேர் இலஞ்சம் தந்து காரியம் சாதித்துள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளனர்.

ஊழலை அடுத்து இலஞ்சத்திலும் இந்தியா தான் முதல் இடத்தில் உள்ளது.

இந்தியாவில் பொலிஸ் துறையில் 62 சதவீதம், பதிவுத்துறை மற்றும் அனுமதி வழங்கும் துறையில் 61 சதவீதம், கல்வி துறையில் 48 சதவீதம், நில அளவை மற்றும் நிலம் சம்பந்தப்பட்ட துறையில் 38 சதவீதம், நிதித்துறையில் 36 சதவீதம் இலஞ்சம் நடமாடுவதாக மேற்கண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

இப்படி பெருகிவரும் இலஞ்சம் ஜனநாயகம் மற்றும் சட்டப்படியான நடைமுறை ஆகியவற்றின் மீதான மக்களின் அடிப்படை நம்பிக்கையையே தகர்ந்து விடுகிறது. இலஞ்சம் பெறுவது என்பது குறுக்கு வழியில் ஆதாயம் பெற நினைக்கும் தனி நபருக்கு மட்டும் அதிக செலவை ஏற்படுத்தவில்லை.

எதிர்வினையாக மற்றவர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய முன்னுரிமைகளையும், சட்டத்தின் ஆட்சியையும், ஒட்டுமொத்தமாக சமுதாய ஒருமைப்பாட்டையும் அர்த்தமற்றதாக்கி விடுகிறது என அந்த சர்வே அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது.