ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற காளை பிடிக்கும் திருவிழாவில், அமெரிக்கர் ஒருவரை காளை குத்திய காட்சிகள் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்பெயின் நாட்டில் உள்ள Ciudad Rodrigo நகரில் வருடந்தோறும் நடைபெறும் del Toro என்ற காளை பிடிக்கும் திருவிழா உலகம் முழுவதும் பிரபலம் வாய்ந்தது.
இந்த திருவிழா சமீபத்தில் தொடங்கிய நிலையில், காளை பிடிக்கும் விளையாட்டை கண்டுகளிக்க நேற்று உலகம் முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் Ciudad Rodrigo நகரில் திரண்டனர்.
இவர்களில் அமெரிக்க நாட்டின் Georgia மாகாணத்தை சேர்ந்த பெஞ்சமின் மில்லர் என்பவர் தனது அமெரிக்க நண்பர்களுடன் காளை பிடிக்கும் திருவிழாவிற்கு வந்துள்ளார்.
விழா தொடங்கியதும் காளைகள் ஒன்றின் பின் ஒன்றாக திடலுக்குள் திமிறிக்கொண்டு வந்தன. அதில் ஒரு காளை கூட்டதில் புகுந்து அங்கே நின்றுக்கொண்டிருந்த மில்லரை தாக்கத் தொடங்கியது.
காளையிடமிருந்து தப்பிக்க முயற்சித்தபோது, அது மில்லரின் மேலாடையை கிழித்து அவரது தொடையில் கொம்பை இறக்கியது.
தொடையை கிழித்தவாறே அவரை நெடுந்தூரம் தூக்கி சென்றது. இதில் அலறி துடித்த மில்லரை காப்பாற்ற அவரது நண்பர்கள் காளையின் வாலை பிடித்து இழுத்து முயற்சி செய்தனர்.
சில நிமிடங்கள் போராட்டங்களுக்கு பிறகு காளையிடமிருந்து மில்லரை மீட்டு, அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர்.
மில்லரை பரிசோதித்த மருத்துவர் மில்லரின் தொடையில் சுமார் 40 செ.மீ அளவிற்கு ஆழமாக காயம் ஏற்பட்டுள்ளது.
காளை தாக்கி இவ்வளவு ஆழமான காயத்தை நான் இதுவரை பார்த்தது இல்லை எனக்கூறிய அவர், மில்லருக்கு சுமார் 3 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்தார். வருடந்தோறும் நடைபெறும் இந்த காளை திருவிழாவிற்கு மக்கள் மத்தியில் ஆதரவும், எதிர்ப்பும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.