இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விசாரணை அறிக்கை வெளியிடுவதைப் பிற்போடும் ஐ.நாவின் தீர்மானத்தை, அமெரிக்காவும், இலங்கையும் வரவேற்றுள்ளன.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மூத்த அதிகாரி ஒருவர் ரொய்ட்டர்ஸ் செய்தி சேவைக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் உறுதிப்பாட்டையும், அதையடுத்து. ஐ.நா மனித உரிமைகள் பேரவை எடுத்துள்ள முடிவையும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வரவேற்கிறது. எல்லாத் தரப்புகளினதும், கரிசனைகளையும் திருப்திப்படுத்துவதற்கு அமெரிக்கா ஊக்கமளிக்கிறது.
விசாரணை அறிக்கை தாமதிக்கப்படுவது மனித உரிமை விவகாரங்களில் ஒத்துழைப்பதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்துவதற்கு புதிய அரசாங்கத்திற்கு இது ஒரு சந்தர்ப்பமாக அமையும் எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதேவேளை விசாரணை அறிக்கை வெளியிடுவதைப் பிற்போடும் தீர்மானத்தை இலங்கை வெளிவிவகார அமைச்சின் அதிகாரியொருவரும் வரவேற்றுள்ளார்.
இது பொறுப்புக்கூறல் விவகாரங்களுக்கான ஜனநாயக செயல்முறைகளை உருவாக்கும் புதிய அரசாங்கத்தின் நகர்வுக்கு ஆதரவாக சரியான நேரத்தில், எடுக்கப்பட்ட முடிவு என அவர் குறிப்பிட்டுள்ளார்.