இலங்கை மீதான யுத்தக்குற்ற விசாரணை அறிக்கையை பிற்போடுவதற்கு சர்வதேச மனித உரிமைகள் பேரவை மேற்கொண்டுள்ள தீர்மானம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கவலையடையவும் இல்லை. அதேநேரம் இதில் மகிழ்ச்சி கொள்வதற்கும் ஒன்றும் கிடையாது என்று கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் பாரிய மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பிலான சர்வதேச விசாரணை அறிக்கையை செப்டெம்பர் மாதம் வரை பிற்போடுவதற்கு பேரவை தீர்மானித்திருப்பது தொடர்பிலேயே சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதாக பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது.
இது தெடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு விவகாரம் பிற்போடப்பட்டிருக்கின்ற காலப்பகுதியில் மேலும் பல புதிய விடயங்களை விசாரணைக்குழுவிடம் சமர்ப்பிப்பதற்கு வழிவகுத்துள்ளது என்று கூறவேண்டும்.
அந்த வகையில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு நாம் எமது ஒத்துழைப்புக்களை வழங்கவேண்டியது அவசியமானது. எப்படி இருப்பினும் பேரவையின் தீர்மானம் எமக்கு எந்த வித கவலையையும் தரவில்லை என்பது போல் மகிழ்ச்சியையும் அளிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.