தனியார் துறையினருக்கு 15 முதல் 35 வீதம் வரை சம்பள அதிகரிப்பை வழங்க இணக்கம்!!

531

salary-sri-lanka

தனியார் துறையினருக்கு 15 வீதம் முதல் 35 வீதம் வரையான சம்பள அதிகரிப்பை வழங்குவது தொடர்பில் கொள்கை அளவில் ஆராய்வதற்கு சம்பள கட்டுப்பாட்டுச் சபை முன்வந்துள்ளது என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனாரட்ன தெரிவித்தார்.

நீதி மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ சமப்ள கட்டுப்பாட்டு சபையுடன் நடத்திய பேச்சுக்களின்போதே இந்த இணக்கம் காணப்பட்டுள்ளது. இந்த விடயத்தை அமைச்சரவைக்கு அமைச்சர் விளக்கினார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தனியார் துறையினருக்கு சம்பள அதிகரிப்பு வழங்குவது குறித்து பேசப்பட்டுவருகின்றது. இந்நிலையில் சம்பள கட்டுப்பாட்டுச் சபையுடன் நீதி மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் பேச்சு நடத்தினார்.

இந்த சம்பள கட்டுப்பாட்டு சபையில் முதலாளிமார் சங்கமும் ஊழியர் சங்கங்களும் இடம்பெறுகின்றன. இந்நிலையில் தனியார் துறை ஊழியர்களின் குறைந்த சம்பளத் தொகையை 10000 ரூபாவாக அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போது 7000 ரூபா மற்றும் 8000 ரூபா சம்பளமும் வழங்கப்படுகின்றது.

எனவே அதனை 10 ஆயிரம் ரூபாவாக உயர்த்த இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பள கட்டுப்பாட்டுச் சபை விடயதானத்துக்குள ஹோட்டல் மற்றும் வர்த்தக நிலைய ஊழியர்கள் வரமாட்டார்கள். இந்நிலையில் அதுபோன்ற ஊழியர்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் தனியார் துறை ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு விடயம் தொடர்பிலும் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ சம்பள கட்டுப்பாட்டுச் சபையுடன் பேசியிருக்கின்றார். இந்நிலையில் தனியார் துறை ஊழியர்களுக்கு 15 வீதம் முதல் 35 வீதம் வரையான சம்பள அதிகரிப்பை வழங்குவது தொடர்பில் கொள்கை அளவில் ஆராய்வதற்கு சம்பள கட்டுப்பாட்டுச் சபை முன்வந்துள்ளது. கொள்கை அளவில் ஆராயவே முன்வந்துள்ளனர் என்பது இங்கு முக்கியமானது என்றார்.

-வீரகேசரி-