காடும், காடு சார்ந்த முல்லை மண்ணில் ”காட்டில் ஓர் கதை நூல்” நேற்று (19.02.2015) வெளியிடப்பட்டிருக்கிறது. வள்ளுவர்புரம் யோ.புரட்சியின் மாற்றங்காணும் அரங்குகள் வரிசையில் ”ஆஷா நாயும் அவளும்” எனும் இச்சிறுகதை நூல் வள்ளுவர் புரம் பாரதி வித்தியாலயத்திற்கு அருகிலுள்ள காட்டில் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்நிகழ்விற்கு கற்சிலைமடு அதிபர் சி.நாகேந்திரராசா தலமைதாங்க, தொடர்ந்து வரவேற்பு நடனத்தின் பின்னர் வரவேற்புரை இளங்கவிஞர் முல்லைத்தீபன் அவர்களால் நிகழ்த்தப்பட்டது. நூலிற்கான நயவுரையினை கவிஞர் சமரபாகு சீனா உதயகுமார் வழங்கினார். முதற்பிரதியினை வடமாகாண சபை உறுப்பினரும் அபிஸா தனியார் வைத்தியசாலை உரிமையாளருமாகிய வைத்தியர் சிவமோகன் பெற்றுக்கொண்டார்.
ஏற்கனவே வள்ளுவர் புரத்தில் பாடசாலை மர நிழலில் ”இடம்பெயர்ந்த ஊரில் இடம்பெயரா நாய்” எனும் கவி நூலையும், முல்லைத்தீவு கடற்பரப்பில் வைத்து மிதக்கும் படகுகளில் ” எதிர்வீட்டு நாயும் என் ஏழை நாயும்” எனும் கவிதை நூலினையும் வெளியிட்ட இக்கவிஞர், சிறுவர்கள் பெரியவர்கள் உட்பட தூர தேசத்திலிருந்து வருகை தந்த ஏராளமான வாசகர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் நன்றியுள்ள ஜீவனைக் கைவிடாது.. ”ஆஷா நாயும் அவளும்” எனும் இச் சிறுகதை நூலினையும் பிரசவித்துள்ளார்.