வவுனியா மாவட்டத்தில் நந்தமித்ர என்ற பெயரில் புதிய கிராமமொன்றை அமைத்துள்ள இராணுவத்தினர் அதனை மக்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
329 வீடுகளைக் கொண்டுள்ள இந்த கிராமத்தை ஓய்வுபெற்றுச் சென்றுள்ள இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்நாயக்க உத்தியோகபூர்வமாக திறந்துவைத்து, தெரிவுசெய்யப்பட்ட மக்களிடம் கையளித்துள்ளார்.
329 வீடுகளைக் கொண்டுள்ள இந்த நந்தமித்ர கிராமம், சிங்கள பௌத்த மக்களின் கௌரவத்திற்கு பாத்திரமான துட்டகெமுனு மன்னனின் பத்து இராணுவத் தளபதிகளில் ஒருவராக திகழ்ந்த ஒருவரான நந்தமித்ர என்பரை கௌரவிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை நந்தமித்ர என்ற துட்டகெமுனு மன்னனின் இராணுவத் தளபதி ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வவுனியா பிரதேசத்திலேயே வாழ்ந்ததாகவும் கூறும் இராணுவம், அதனாலேயே இந்தக் கிராமத்திற்கு அவரது பெயரை சூட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை இந்தக் கிராமத்தின் வாயிலில் நந்தமித்திரவின் பிரமாண்டமான உருவச் சிலையொன்றையும் இராணுவத்தினர் நிர்மாணித்துள்ளனர்.
அத்துடன் இந்தக் கிராமத்தில் யுத்தம் காரணமாக வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த சிங்கள குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டுள்ளதாகவும் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
329 வீடுகளில் நூறு வீடுகள் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், ஏனையவையும் விரைவில் அமைத்துக்கொடுக்கப்படவுள்ளன. பாடசாலை, நூலகம், விளையாட்டு மைதானம், மருந்தகம், விகாரை உட்பட அனைத்து வசதிகளும் செய்துகொடுக்கப்படவுள்ளன.
இந்த நிகழ்வில் வன்னி கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெர்னாண்டோவும் கலந்துகொண்டிருந்தார்.