செவ்வாய்கிரகத்தில் பெண்மணி ஒருவர் முதல் முறையாக குழந்தை பெற்றெடுக்கப்போகிறார் என்ற வியப்பூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.
நெதர்லாந்தை சேர்ந்த ‘Mars One’ என்ற தனியார் நிறுவனம் கடந்த 2013ம் ஆண்டு ‘The Mars 100’ என்ற பிரமாண்டமான திட்டத்தை அறிவித்தது.
இத்திட்டத்தின் மூலம் பூமியிலிருந்து சுமார் 100 நபர்களை தெரிவு செய்து, 2024 ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு சென்று அங்கேயே நிரந்தரமாக குடியேற்ற முடிவெடுத்தது.
இந்த அறிவிப்பு வெளியான நாளிலிருந்து, இந்த சாகசம் நிறைந்த பயணத்தில் பங்கு பெற உலகம் முழுவதிலும் சுமார் 2 லட்சம் நபர்கள், தங்களின் பெயர்களை பதிவு செய்தனர்.
இவர்களில் ரஷ்யா, அமெரிக்கா, பிலிப்பைன்ஸ், டென்மார்க், பொலிவியா, வியட்நாம், ஜப்பான், ஈராக், உக்ரெய்ன் மற்றும் சீனாவை சேர்ந்த 100 நபர்களை இறுதியாக தெரிவு செய்யும் பணி கடந்த வாரத்தில் நடந்து முடிந்தது.
இந்த பயணத்திற்கு தெரிவான ஒக்ஸ்போட் பல்கலைக்கழக மாணவரான ரியான் மெக்டொனால்ட் கூறுகையில், இந்த உலகத்தில் இருப்பவர்கள் வழக்கமாக செய்வதை விட வித்தியாசமாக ஏதாவது சாதிக்க வேண்டும் என்பது எனது லட்சியம்.
மேலும், இந்த முயற்சி மற்றவர்களுக்கும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் மீது ஆர்வம் ஏற்படுத்தும் என கூறியுள்ளார்.
பிரித்தானியாவை சேர்ந்த 24 வயதான மேகி லியூ என்ற பெண் தெரிவாகியது மட்டுமல்லாமல், செவ்வாய் கிரகத்தில் ஒரு குழந்தையை பெற்றெடுக்க முடிவெடுத்துள்ளதாக வியப்பூட்டும் தகவலை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது,
செவ்வாய்கிரகத்தில் குழந்தையை பெற்றெடுப்பதற்கு அங்குள்ள புவி ஈர்ப்பு விசை சாதகமா இருக்காது என்று இதுவரை ஆராய்ச்சியில் வெளியாகவில்லை என்றும் அதனால், அங்கு தான் நிச்சயம் குழந்தை பெற்றெடுப்பேன் எனவும் கூறியுள்ளார்.
மேலும், இந்த பயணத்திற்கு தெரிவான 100 நபர்கள் அனைவரும் 19 வயதிலிருந்து 60 வயதுடையவர்கள் என்பதால் அவர்களில் ஒருவரை எனது வாழ்க்கை துணையாக ஏற்றுக் கொண்டு குழந்தையை பெற்றெடுப்பேன் என தெரிவித்துள்ளார்.
சுமார் 6 பில்லியன் டொலர்கள் செலவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த பயணத்தில் பங்குபெறுபவர்கள் அனைவருக்கும் வருடக்கணக்கில் பல பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த பிரம்மாண்ட பயணத்தை உருவாக்கியவரும் மற்றும் The Mars 100 திட்டத்தின் தலைமை நிர்வாகியுமான பாஸ் லான்ஸ்டோர்ப் கூறுகையில், உலகமே வியக்குமளவிற்கு இருக்க போகும் இந்த பயணத்தை நேரடியாக செவ்வாய் கிரகத்திலிருந்து ஒளிப்பரப்ப போகிறோம்.
தொலைக்காட்சி மற்றும் இணையதள வசதிகள் உள்ள ஒவ்வொருவரும் இந்த பயணத்தை கண்டுகளிக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.