ருத்ராட்ச மாலையில் தாலி அணிந்த நடிகை குஷ்பு மீதான வழக்கு தள்ளுபடி!!

963

Kushbooo

நடிகை குஷ்பு மீதான ருத்ராட்ச மாலையில் மாங்கல்யம் அணிந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கும்பகோணம் உமாமகேஸ்வரபுரம் சாரங்கபாணிபேட்டை பகுதியை சேர்ந்த இந்து மக்கள் கட்சியின் தஞ்சை மாவட்ட செயலாளரான பாலா, நடிகை குஷ்பு ருத்ராட்ச மாலையில் மாங்கல்யம் அணிந்திருந்த படத்தை வாரப் பத்திரிகை ஒன்றில் கண்டு அதிருப்தி அடைந்துள்ளார்.

இதையடுத்து குஷ்பு மீது கும்பகோணம் 2வது கூடுதல் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடுவர் சரவணபவனிடம் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், ருத்ராட்ச மாலை என்பது சிவனடியார்களும், சிவபக்தர்களும் அணியக்கூடியது. குஷ்பு அணிந்திருக்கும் 3 முகம் கொண்ட ருத்ராட்ச மாலை சிவசக்தி வழிபாடு உள்ளவர்கள் மட்டுமே அணியக்கூடியது.

ஆனால் குஷ்பு ருத்ராட்ச மாலையில் மாங்கல்யத்தை கோர்த்திருப்பது இந்து மதத்தை அவமதிப்பதாக உள்ளது.

அவர் இந்து சமயத்தின் மீதும், இந்து கடவுளின் மீதும், இந்து சமய சின்னங்களை களங்கப்படுத்தும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் இந்திய தண்டனை சட்டப்பிரிவு 295ன் படி அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த மனுவை வி்சாரித்த நீதித்துறை நடுவர் சரவணபவன், மனுதாரர் பாலா வாரப்பத்திரிகையை பார்த்து அதில் அதிருப்தி அடைந்ததாக கூறியுள்ளார். நேரில் பார்த்த சாட்சிகளை இந்த மனுவில் குறிப்பிடவில்லை.

எனவே இந்த வழக்கில் சரியான முகாந்திரம் இல்லாத காரணத்தால் இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிடுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.