மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இடம்பெற்ற போட்டியில் தென்னாபிரிக்க அணி 257 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியுள்ளது.
உலகக் கிண்ணத் தொடரின் 19வது போட்டியாக பி பிரிவிலுள்ள தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் சிட்னியில் இன்று பலப்பரீட்சை நடத்தின.
இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
இதன்படி களமிறங்கிய அந்த அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் குயின்டன் டி கொக் (12) ஏமாற்றமளித்த போதும், காசிம் அம்லா 62 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்த கையோடு ஆட்டமிழந்தார்.
பின்னர் டு பிளசி 62 ஓட்டங்களையும், ரில்லி ரொஷோவ் 61 ஓட்டங்களையும் (39 பந்துகள்) விளாசிய நிலையில் வௌியேற, அணித் தலைவர் டிவிலியர்ஸ் மேற்கிந்திய தீவுகள் அணி பந்து வீச்சாளர்களை சரமாரியாக பதம் பார்த்தார்.
இறுதிவரை ஆட்டமிழக்காது களத்தில் இருந்த அவர், 66 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு, 17 நான்கு ஓட்டங்கள், 8 ஆறு ஓட்டங்கள் அடங்களாக 162 ஓட்டங்களை குவித்தார்.
இதன்படி 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்த அந்த அணி 408 ஓட்டங்களை விளாசியது.
விஷேடமாக கடைசி 10 ஓவர்களில் மட்டும் மேற்கிந்திய தீவுகள் அணியால் 150 ஓட்டங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து 409 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான கிரிஸ் கெய்ல் 3 ஓட்டங்களை மட்டுமே பெற்ற நிலையில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.
அத்துடன் அந்த அணி சார்பில் ஜேசன் ஹோல்டர் (56) மட்டுமே அரைச்சதம் கடந்தார்.
ஏனைய வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களுடன் வரிசையாக வௌியேற, 33.1 ஓவர்களை மட்டுமே தாக்குப்பிடித்த மேற்கிந்திய தீவுகள், 151 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து தோல்வியைத் தழுவியது.
தென்னாபிரிக்கா சார்பில் சிறப்பாக பந்து வீசிய இம்ரான் தாகீர் 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இன்றைய போட்டியின் ஆட்டநாயகனாக டிவிலியர்ஸ் தெரிவானார்.