இலங்கை தீவின் வடமாகாணத்தின் பசுமை நிறைந்த மருத நில வயல்களும் வந்தவருக்கு வயிறார உணவளித்து வாழவைக்கும் வன்னிதிருநாட்டின் வவுனியா நகரின் கண்ணே இறம்பைக்குளம் என்னும் திருப்பதியிலே நறுவிலி மரநிழலின் கீழே வாயிலில் அஷ்ட நாகங்கள் புடை சூழ்ந்து காவல் செய்ய நவரத்தின பீடத்தில் தேவாதி தேவர்கள் புடைசூழ்ந்து ஐந்து தலை நாகத்தின் கீழ் ஸ்ரீ சக்கரத்துடன் கூடிய ஸ்ரீ சக்கர நாயகியாய் வேண்டுவோர்க்கு வேண்டும் வரங்களை மனமுவந்து அள்ளி அருளமுதாய் கொடுத்து அருளாட்சி புரிந்து கொண்டிருக்கும் அன்னை ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாளின் ஏழாவது மகோற்சவ பெருவிழாவில் நேற்றைய தினம்(27.02.2014) சிறப்பாக கற்பூரச்சட்டி திருவிழா இடம்பெற்றது .
நேற்றுமாலை ஆறுமணிக்கு வசந்த மண்டபத்தில் எழுந்தருளிய கருமாரி நாகபூசணி சாமுண்டேஸ்வரி ஆகியோருக்கு விசேஷ பூஜைகள் இடம்பெற்று நடனம் மற்றும் தவில் நாதஸ்வர இசைகள் மூலம் அம்பாளை வழிபட்டதுடன் நூற்றுக்கணக்கான அம்பாளின் அடியார்கள் ஆண்பெண் பேதமின்றி கற்பூரச்சட்டி ஏந்தி நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர். திருமண தடை குழந்தைபாக்கியம் இல்லாதவர்கள் மற்றும் பெரும் துன்பங்களை எதிர்கொண்டவர்கள் எனபலவகையான கஷ்டங்களை எதிநோக்கியவர்கள் அம்பாளை தரிசித்து தங்களது நேர்த்திகடன்களை கற்பூரச் சட்டி ஏந்தி நிறைவு செய்தமையையும் காணக்கூடியதாய் இருந்தது.
படங்கள்,வீடியோ :மௌனகுரு