வவுனியாவில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் சுரேஸ் பிரேமச்சந்திரன், அனந்தி சசிதரன் மற்றும் புலம்பெயர் குழுக்களுக்கு கண்டனம்!!(படங்கள்)

796

கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோரின் செயற்பாட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் தமிழரசுக் கட்சி மத்திய செயற்குழு, புலம்பெயர் குழுக்களுக்கும் கண்டனம் தெரிவித்தது.

வவுனியா, குருமன்காடு லக்சுமி திருமண மண்டபத்தில் நேற்று (01.03) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டத்திலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மற்றும் புலம்பெயர் நாடுகளின் சில குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோரின் உருவப் பொம்மைகள் எரிக்கப்பட்டமைக்கு தமிழரசுக் கட்சியின் செயற்குழு கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.

அத்தோடு யாழில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் உருவப் பொம்மை எரிப்புச் சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் கூட்டமைப்பின் பேச்சாளராகிய ஈபிஆர்எல்எப் கட்சியைச் சேர்ந்த சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் தமிழரசுக் கட்சியின் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறும் தமிழரசுக் கட்சியின் செயற்குழு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கோரிக்கை விடுத்தது.

கடந்த 21 ஆம் திகதி யாழில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் உருவப்பொம்மை எரிக்கப்பட்டது. காணாமல் போனவர்களின் உறவுகளின் ஆர்பாட்டத்தின் போது திடீர் என இந்த உருவப் பொம்மை எரிக்கப்பட்டிருந்தது. இதன் போது அவ்விடத்தில் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளில் ஒன்றாகிய ஈ.பி.ஆ.ர்எல்.எப். கட்சியைச் சேர்ந்த சுரேஸ் பிரேமச் சந்திரன், தமிழரசுக் கட்சியின் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்கள் அதனை இன்று வரை எதிர்க்கவில்லை.

தமிழரசுக் கட்சி ஆராய்ந்ததில் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனின் வாகனத்திலேயே சுமந்திரனின் உருவப் பொம்மை கொண்டுவரப்பட்டதாக அறிய முடிகிறது. ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது திடீரென வல்வெட்டித்துறை நகரசபையின் முன்னாள் உபதலைவர் சதீஸ் அவர்கள் சுமந்திரனின் கொடும்பாவியை எரித்தார். இதனை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கண்டிக்கிறது.

இவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என செயற்குழு முடிவெடுத்துள்ளது. அத்துடன் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளில் ஒன்றாகிய ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியைச் சேர்ந்த சுரேஸ் பிரேமச்சந்திரன் தனக்கு வழங்கப்பட்டுள்ள கூட்டமைப்பின் பேச்சாளர் என்னும் பதவியைப் பயன்படுத்தி தொடர்ச்சியாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரை தொடர்ச்சியாக கடுமையாக விமர்சித்து வருகிறார். உருவப் பொம்மை எரிந்தமையை நியாயப்படுத்தியும் வருகிறார்.

இதனை தமிழரசக் கட்சியின் மத்திய செயற்குழு கண்டிக்கும் அதேவேளை, கூட்டமைப்பின் நாடாளுமன்ற செயற்குழு இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மத்திய செயற்குழு கோருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

01 1 4 5