ஜெனீவா மனித உரிமை பேரவையின் 28வது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகிறது. இதில் இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர விசேட உரையாற்றவுள்ளார்.
மங்கள சமரவீரவின் இந்த உரை ஜெனீவா நேரடிப்படி இன்று பிற்பகல் 1.20 மணிக்கு இடம்பெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அமர்விற்கு மேலதிகமாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் அல் ஹுசேனைச் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் மங்கள சமரவீர அங்கிருந்து நேரடியாக ஜெனீவாவுக்கு சென்றுள்ளார். இவர் தலைமையில் இலங்கையின் உயர் மட்ட அதிகாரிகள் குழுவொன்றும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 28வது கூட்டத்தொடரில் கலந்து கொள்ளவுள்ளது.
மனித உரிமைகள் பேரவையின் உயர் மட்ட கூட்டத் தொடரில் பங்குபற்றும் அமைச்சர் சமரவீர, இதில் கலந்து கொள்வதற்காக ஜெனீவா வருகை தந்திருக்கும் ஏனைய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களையும் சந்தித்து இலங்கையின் புதிய அரசாங்கம் நால்லாட்சி மற்றும் நூறு நாள் வேலைத்திட்டம் குறித்து விளக்கமளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.