கண்டி பேராதனை பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையின் ஏற்பாட்டில் ”புதிய நோக்கில் சங்க இலக்கியம்” எனும் தேசிய கருத்தரங்கு ஒன்று 28.2.2015 அன்று பேராதனை பல்கலைக்கழக கலைத்துறை ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.
பேராதனை பல்கலைக்கழக தமிழ்த்துறை ஒழுங்குசெய்த இந்நிகழ்வினை தமிழ்த் துறைத்தலைவரும் பேராசிரியருமான மகேஸ்வரன் அவர்கள் தலைமை தாங்கினார். பல்கலைக்கழக துணைவேந்தர், பதில் துணைவேந்தர், கலைத்துறைப் பீடாதிபதி போன்ற அதிதிகள் ஆரம்ப நிகழ்வில் கலந்து சிறப்பித்திருந்தனர்.
நிகழ்விற்கான ஆதார சுருதி உரையினை முனைவர் சா.உதயசூரியன் (தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்) அவர்கள் நிகழ்த்தினார்.
இந்நிகழ்விற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கிழக்குப் பல்கலைக்கழகம்,ஜெயவர்தனபுர பல்கலைக்கழகம் மற்றும் பேராதனை பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஓய்வுநிலைப் பேராசிரியர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்களும் இலக்கிய ஆர்வலர்கள், மாணவர்களும் அழைக்கப்பட்டிருந்தனர்.
இக் கருத்தரங்கின் ‘புதிய நோக்கில் சங்க இலக்கியம்’ எனும் தலைப்பினை மேலும் வலியுறுத்தி, அத்தலைப்பினைச் சார்ந்து பல்வேறு தலைப்புக்களில் பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களால் ஆய்வரங்குகளும் நடாத்தப்பட்டன.
உண்மையில், ஈழத்து இலக்கியத்துறையின் சமகால அரும் பெரும் பொக்கிஸங்கள் ஒருங்கேயமர்ந்து ஆய்வுரைகள் நிகழ்த்தியதும், சங்கத்தமிழ் நின்று முழக்கமிட்டதனையும், கருத்துரைகளுக்கான விளக்கவுரைகளைத் தந்தமையும், நகைச்சுவை உணர்வுடன் கலகலப்பாக இளவல்களுடன் ஒன்றித்துப் போனதும் ஈழத்து இலக்கியத்தடத்தில் ஒரு பெறுமதியான பதிவாகவே இருக்கும்.
-முல்லைத் தீபன்-