மத்தள ராஜபக்ச விமானநிலையம் இன்று முதல் இரவில் மூடப்படுகின்றது!!

1151

Mattala

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால், அம்பாந்தோட்டையில் தனது பெயரில் அமைக்கப்பட்ட, மத்தள சர்வதேச விமான நிலையம் இரவில் மூடப்படவுள்ளது.

இதுதொடர்பாக கருத்து வெளியிட்ட, இலங்கையின் விமானப் போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, அரசாங்கத்துக்கு வருமானத்தை அளிக்காததால், இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்

மத்தல விமான நிலையத்தை இரவு நேரத்தில் மூடுவது குறித்து கலந்துரையாடல்களை நடத்தியுள்ளோம்.

இந்த விமான நிலையத்தின் பராமரிப்புக்காக அரசாங்கம் 250 மில்லியன் ரூபாவைச் செலவிட வேண்டியுள்ளது. வரி செலுத்துவோரின் பணத்தில் இருந்தே, இந்த விமான நிலையம் பராமரிக்கப்படுகிறது.

இந்த விமான நிலையத்தை முற்றாக மூடுவதற்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மில்லியன் கணக்கான டொலரை சீனாவிடம் இருந்து பெற்று இந்த விமான நிலையத்தை இலங்கையின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நிர்மாணித்திருந்தார்.

மகிந்த ராஜபக்ச அனைத்துலக விமான நிலையம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விமான நிலையம் வழியான சேவைகளை கடந்த ஜனவரி மாதம், ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுத்தி விட்டது குறிப்பிடத்தக்கது.