வவுனியாவில் அறநெறிப்பாடசாலைகளை சீராக இயக்குவதற்கும் அவற்றை கண்காணிப்பதற்கும் ஏற்ற ஒழுங்குகளை செய்யுமாறு வெங்கல செட்டிகுளம் பிரதேச சபையின் உப தவிசாளர் த.சந்திரமோகன் வட மாகாண முதலமைச்சருக்கு கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார். அக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..
இந்து அறநெறி ஆசிரியர்களுக்கு இதுவரை ஒரு முறையான வேதனமோ அல்லது ஊக்குவிப்பு கொடுப்பனவோ வழங்கப்படவில்லை. வவுனியாவில் சுமார் எழுபதிற்கும் மேற்பட்ட அறநெறிப் பாடசாலைகள் இயங்குகின்றன.
கலாச்சார சீரழிவுகள், போதைவஸ்து பாவனை என்பனவற்றிற்கு அடிமையாகி இளம்பருவத்தினர் பாதை மாறிச் செல்கின்ற இக் காலப்பகுதியில் அவர்களை ஒழுக்கசீலர்களாகவும் கலை கலாசார பண்பாட்டு விழுமியங்களை கடைப்பிடிப்பவர்களாகவும் எதிர்காலத்தில் நற்பிரஜைகளாக வளர்ப்பதற்கும் அறநெறிப்பாடசாலைக் கல்வி பெரிதும் உதவுகின்றது.
வெறுமனே பாடசாலைக்கல்வி மட்டும் இவர்களை நற்பண்போடு வாழ போதுமானதல்ல. ஆகவே அறநெறிப்பாடசாலைகள் சீராக இயங்குவதற்கும் அவற்றை கண்கானிப்பதற்கும் ஏற்ற ஒழுங்குகளை செய்வதோடு இதுவரை காலமும் சமய சமூக பணியாக கல்வி கற்பிக்கும் அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கும் மாதாந்த ஊக்குவிப்பு கொடுப்பனவை வழங்குவதற்கு வட மாகாணசபை முன்வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.