இந்திய கிரிக்கெட் அணியின் துணை தலைவர் விராத் கோலி, இரண்டு நாட்களுக்கு முன்பு அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் பயிற்சியில் ஈடுபட்டுவிட்டு திரும்புகையில் அங்கு இருந்த ஆங்கில நாளிதழின் நிருபரை பார்த்து திடீரென கண்டபடி தகாத வார்த்தையால் வசைபாடினார்.
விராத் கோலியின் காதலியான இந்தி நடிகை அனுஷ்கா சர்மா குறித்து அந்த ஆங்கில பத்திரிகையில் வெளியான கட்டுரையை சம்பந்தப்பட்ட நிருபர் தான் எழுதினார் என்று கருதி விராத் கோலி நிதானம் இழந்து இவ்வாறு நடந்துள்ளார்.
ஆனால் கட்டுரைக்கும், வசைமொழிக்குள்ளான நிருபருக்கும் சம்பந்தம் இல்லை என்பது பின்னர் தெரியவந்ததும் விராத் கோலி, நடந்த சம்பவத்துக்காக வேறு நிருபர் மூலம் வருத்தம் தெரிவித்தார். ஆனாலும் அந்த பிரச்சினை ஓய்ந்து விடாமல் விஸ்வரூபம் எடுத்தது.
வருங்கால தலைவராக உருவாகி வரும் விராத் கோலி பொது இடத்தில் நிருபரிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட விதம் ரசிகர்களை மட்டுமின்றி முன்னாள் வீரர்களையும் முகம் சுழிக்க வைத்தது. இருப்பினும் இந்திய கிரிக்கெட் சபையும், அணி நிர்வாகமும் விராத் கோலி தகாத வார்த்தை எதுவும் பயன்படுத்தவில்லை.
தவறான புரிந்து கொள்ளுதல் காரணமாக இந்த சம்பவம் நடந்து விட்டது என்று விராத் கோலிக்கு ஆதரவாகவே ஒத்து ஊதியது. இதற்கிடையே யாரும் எதிர்பார்க்காத நிலையில் விராத் கோலியால் அவமதிக்கப்பட்ட அந்த நிருபர் இந்திய கிரிக்கெட் சபைத் தலைவர் டால்மியாவுக்கு புகார் கடிதம் எழுதினார்.
அத்துடன் சர்வதேச கிரிக்கெட் சபையின் கவனத்துக்கும் கொண்டு சென்றதால் இந்த பிரச்சினை மேலும் வலுத்தது. அதோடு அங்குள்ள சட்டவிதிப்படி விராத் கோலி மீது வழக்கு தொடர வழிமுறை உள்ளதா என்றும் அந்த நிருபர் ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில் சர்ச்சை குறித்து விசாரணை நடத்திய இந்திய கிரிக்கெட் சபை, விராத் கோலி தவறாக நடந்து கொண்டது தெரியவந்ததால் அவரை எச்சரிக்கை செய்துள்ளது. இது குறித்து இந்திய கிரிக்கெட் செயலாளர் அனுராக் தாகூர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது..
இரண்டு நாட்களுக்கு பிறகு பேர்த்தில் நடந்த சம்பவம் குறித்து சபையின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. சம்பந்தப்பட்ட வீரர் (விராத் கோலி) இந்திய அணியின் கண்ணியத்தையும், மாண்பையும் கட்டி காக்கும் வகையில் எல்லா நேரங்களிலும் நடந்து கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக இந்திய கிரிக்கெட் சபை, இந்திய அணி நிர்வாகத்துடன் தொடர்ந்து தொடர்பு வைத்துள்ளது. இதுபோன்ற சம்பவம் வருங்காலத்தில் மீண்டும் நடக்காத வகையில் பார்த்து கொள்ள வேண்டும் என்று அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கிரிக்கெட் செய்திகளை சேகரிப்பதிலும், கிரிக்கெட்டை பிரபலப்படுத்துவதிலும் ஊடகங்களின் பங்களிப்பை இந்திய கிரிக்கெட் சபை மதிக்கிறது.
ஊடகங்களின் ஆதரவையும் வரவேற்கிறோம். சம்பந்தப்பட்ட அனைவரும் பிரச்சினையை மறந்து உலக கிண்ண போட்டி தொடரில் இந்திய அணியின் அடுத்தடுத்த போட்டிகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில் விராத் கோலியின் மோசமான செயலுக்கு இந்திய அணியின் முன்னாள் தலைவர் கவாஸ்கர், அவுஸ்திரேலிய முன்னாள் தலைவர் ஸ்டீவ் வோ, மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் தலைவர் பிரையன் லாரா, இந்திய முன்னாள் வீரர் வி.வி.எஸ்.லட்சுமண் உள்பட பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
விராத் கோலி கொஞ்சம் முதிர்ச்சியுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் நடந்த சம்பவத்துக்காக சம்பந்தப்பட்ட நிருபரிடம் அவர் வருத்தம் தெரிவிப்பது தான் பிரச்சினைக்கு சரியான தீர்வு என்றும் கூறியுள்ளனர்.