தென் கொரியாவின் தலைநகர் சியோலில் அந்நாட்டிற்கான அமெரிக்கத் தூதுவர் மார்க் லிப்பேர்ட் வியாழக்கிழமை நபரொருவரின் கத்திக் குத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சியோல் நகரில் இடம்பெற்ற காலை விருந்துபசார நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட போதே அவர் மீது கத்திக் குத்து நடத்தப்பட்டுள்ளது.தாக்குதல் நடத்திய 55 வயதான கிம் என்ற சுருக்கப் பெயரால் அழைக்கப்படும் குறிப்பிட்ட நபர், “வட கொரியாவும் தென் கொரியாவும் இணைக்கப்பட வேண்டும்’ என கூச்சலிட்டவாறு கத்தியுடன் லிப்பேர்ட்டை நெருங்கி “போர் பயிற்சிக்கு இடமில்லை” எனத் தெரிவித்தவாறு இந்தத் தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது.
தாக்குதல்தாரி லிப்பேர்ட்டின் வலது கன்னத்திலும் இடது மணிக்கட்டுப் பகுதியிலும் கத்தியால் வெட்டியுள்ளார்.இதனால் அதிர்ச்சியுடன் குருதி பெருக்கெடுத்தோட லிப்பேர்ட் நின்றிருக்க, பொலிஸார் கிம்மை உடனடியாக மடக்கிப் பிடித்துக் கைதுசெய்துள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லிப்பேர்ட் அறுவைச்சிகிச்சையொன்று உட்படுத்தப்பட்டதாகவும் அவரது உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை எனவும் தென் கொரிய அதிகாரிகள் கூறுகின்றனர்.கிம், கொரிய தேசியவாத செயற்பாட்டாளர்களுடன் தொடர்புபட்ட ஒருவர் என தெரிவிக்கப்படுகிறது.
அவர் 2006 ஆம் ஆண்டிற்கும் 2007 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் ஆறு தடவைகள் வட கொரியாவுக்கு பயணத்தை மேற்கொண்டிருந்ததாக புலனாய்வு அதிகாரிகள் கூறுகின்றனர்.
2011 ஆம் ஆண்டில் கிம், வட கொரிய மறைந்த தலைவலர் கிம் – யொங் இல்லிற்காக சியோலில் ஞாபகார்த்த ஸ்தலமொன்றை அமைக்க முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தாக்குதலானது தென் கொரிய, அமெரிக்க கூட்டிணைப்பு மீதான தாக்குதல் என தென் கொரிய ஜனாதிபதி பார்க் கெயுன் – ஹை குற்றஞ்சாட்டியுள்ளார்.தென் கொரியாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையிலான வருடாந்த இராணுவ பயிற்சிகள் திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையிலேயே மேற்படி தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.