ஜெயலலிதாவின் 22 ஆண்டு கால வழக்கு முடிவுக்கு வந்தது!!

480

Jeyalalitha

ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா ஆகியோர் மீதான டான்சி நில வழக்கு 22 ஆண்டுகளுக்குப் பின்னர் முடிவுக்கு வந்துள்ளது.

சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் அரசு நிறுவனமான தமிழ்நாடு சிறு தொழில்கள் கழகத்துக்குச் (டான்சி) அமைந்துள்ளது. அந்த தொழிற்பேட்டைக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தை 1992ம் ஆண்டில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும், அவரது தோழி சசிகலாவும் பங்குதாரர்களாக இருந்த ஜெயா பப்ளிகேஷனுக்காக வாங்கியதில் அரசுக்கு 2.76 கோடி இழப்பு ஏற்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது.

கடந்த 2000ம் ஆண்டு, இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதா, சசிகலாவுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. பின்னர் சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் சிறப்பு நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதித்தாலும், தண்டனையை ரத்து செய்யவில்லை.

பின்னர் 2003ம் ஆண்டு இவ்வழக்கில் இருந்து ஜெயலலிதா உள்ளிட்டோரை விடுதலை செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோரை விடுவித்து டான்சி சொத்தை திருப்பித் தர வேண்டும். என்று 2003ம் ஆண்டு நவம்பர் மாதம் தீர்ப்பளித்தது.

முன்னதாக 1993ம் ஆண்டு திமுகவைச் சேர்ந்த ஆலந்தூர் பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அரசுக்குச் சொந்தமான டான்சி நிலத்தை ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்துக்கு விற்றது சட்டவிரோதம் என்பதால், அந்த விற்பனைப் பத்திரத்தை ரத்துசெய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரினார்.

இந்த வழக்கு கடந்த 22 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த நிலையில், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் கொண்ட குழு முன்பு இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது டான்சிக்கு சொந்தமான சொத்து அந்த நிறுவனத்துக்கே திருப்பித் தரப்பட்டுவிட்டது என்று கூறப்பட்டதோடு இந்த வழக்கு அவசியமற்றது என்று வாதிடப்பட்டது.

மேலும், இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் ஆலந்தூர் பாரதி தொடர்ந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ள‌னர்.