வவுனியாவில் இன்று (11.03) இந்திய வீட்டுத் திட்டத்தில் முறைகேடுகள் இடம்பெறுவதாகத் தெரிவித்தும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டுத் திட்டம் வழங்கக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மீள்குடியேறியோர் நலன் பேணும் அமைப்பு மற்றும் வவுனியா பிரஜைகள் குழு ஆகியவற்றின் ஏற்பாட்டில் வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று காலை ஒன்று கூடிய மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் ஊர்வலமாகச் சென்று மாவட்ட அரசாங்க அதிபர் எம்.கே.பந்துல ஹரிச்சந்திரவிடம் மனு ஒன்றையும் கையளித்தனர். இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு இந்த மனுக்கள் வழங்கப்பட்டன.
இலங்கையின் வடபகுதிக்கு வருகை தரும் இந்திய பிரதமர் நரோந்திரமோடி இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், வினோநோதராதலிங்கம், மற்றும் மாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநதான், ம.தியாகராசா, சி.சிவமோகன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.