நடைமுறையில் இருந்துவரும் விகிதாசாரத் தேர்தல் முறைமையின் பிரகாரமே அடுத்து நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலுக்கும் முகம்கொடுப்பது என்றும், இதன்படி ஏப்ரல் மாதம் 23ஆம் திகதிக்குப் பின்னர் பொதுத்தேர்தலுக்கு செல்வதென்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு நேற்றுப் புதன்கிழமை ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
100 நாள் வேலைத்திட்டத்திற்கென ஏற்படுத்தப்பட்ட தேசிய அரசாங்கத்தை ஏப்ரல் மாதம் 23ஆம் திகதிக்குப் பின்னரும் நீடிக்கச் செய்வதற்கு நேற்றைய செயற்குழுக் கூட்டத்தின் போது பெரும்பாலான உறுப்பினர்கள் இணக்கம் தெரிவிக்கவில்லை என்றும் தெரியவந்துள்ளது. நீண்டநேர வாத விவாதங்கள், கருத்துப் பரிமாறுதல்களுக்குப் பின்னரே மேற்கண்டவாறு அனைவரினது இணக்கப்பாட்டுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம் நிறைவடைந்ததன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அக்கட்சியின் பேச்சாளரும் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் செயற்குழுவின் தீர்மானத்தை உறுதிப்படுத்தினார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நேற்றுப் புதன்கிழமை கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் தேசியத் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கூடியது. இதன்போதே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேற்படி கூட்டத்தில் அடுத்து வரும் பொதுத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பான விடயமே பிரதான கருப்பொருளாகக் கொண்டு நேற்று பேசப்பட்டுள்ளது.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட கட்சியின் பேச்சாளரும் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் மேலும் கூறுகையில்,
அடுத்ததாக நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலானது புதிய முறைமையின் அதாவது தொகுதிவாரி முறைமையின் நடத்தப்பட வேண்டுமெனில் அரசியலமைப்பு ரீதியாக திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் 100 நாள் வேலைத்திட்டத்திற்குள்ளான காலப்பகுதி அதற்குப் போதுதானதல்ல என்றும் தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
அவரது கூற்று இன்றைய (நேற்று) செயற்குழுக் கூட்டத்தில் விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டது. அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்வதாயின் சில மாதங்கள் செல்லலாம் என்றும் உடனடியாகவே அதனை மேற்கொள்ள முடியாது என்பதாலும் அடுத்து நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலை தற்போது நடைமுறையில் இருந்துவரும் விகிதாசார முறைமையின் பிரகாரமே பொதுத் தேர்தலை நடத்துவதென்றும் அதனை எதிர்கொள்வதென்றும் செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதுமாத்திரமன்றி தற்போது இருந்து வரும் தேசிய அரசாங்கம் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே 100 நாட்களின் பின்னர் நாம் தேர்தலுக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அந்த வகையில் நாம் ஏற்கனவே அறிவித்திருந்ததன்படி ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதியின் பின்னர் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தலுக்கு செல்வதென்றும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் ஏப்ரல் 23ஆம் திகதிக்குப் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி பொதுத் தேர்தல் ஒன்றை எதிர்கொள்வதற்கு தயாராகியுள்ளது.
சமுர்த்தி சலுகைக்கு குழு நியமனம்
இதேவேளை சமுர்த்தி பெறுவோரின் எண்ணிக்கையை மேலும் அதிகரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டது. அந்த யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டதன் பிரகாரம் சமுர்த்தி பயனாளர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதென்றும் அது தொடர்பான வேலைத் திட்டங்களை விரைவாக முன்னெடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இதற்கென விசேட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி அமைச்சர்களான சஜித் பிரேமதாஸ, அகிலவிராஜ் காரியவசம், இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மற்றும் சமந்த கருணாரத்ன உள்ளிட்டோர் இக்குழுவில் இணைக்கப்பட்டுள்ளனர்.
300 இலட்சம்
இது இவ்வாறிருக்க நாட்டின் வீதி அபிவிருத்தி செயற்றிட்டங்களை கருத்திற்கொண்டு ஒவ்வொரு தேர்தல் தொகுதி அமைப்பாளர்களுக்கும் தலா 300 இலட்சம் ரூபாவை ஒதுக்கீடு செய்வதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றார்.