சென்னையில் உள்ள தனியார் தொலைக்காட்சி அலுவலகமான புதியதலைமுறை தொலைக்காட்சி அலுவலகம் மீது இன்று அதிகாலை இனந்தெரியாதோர் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இன்று அதிகாலை 3 மணியளவில் இரண்டு பேர் அலுவலகத்தின் மீது குண்டுகளை வீசிச் சென்றுள்ளனர். இந்தச்சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
குண்டுகள் வீசப்பட்டமை தொடர்பாக சிசிரிவி கமெராவில் பதிவாகியுள்ள காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அக்காணொயில் இருக்கும் நபர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.
சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு சில தினங்களுக்கு முன், அத்தொலைக்காட்சி தாலி பெண்களைப் பெருமைப்படுத்துகிறதா அல்லது சிறுமைப்படுத்துகிறதா என்ற தலைப்பில் விவாத நிகழ்ச்சியை ஒளிபரப்ப இருந்தது.
இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பக் கூடாது என சில அமைப்புக்களை சேர்ந்தவர்கள் அந்த தொலைக்காட்சி அலுவலகத்தின் முன் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இன்று இருசக்கர வாகனத்தில் வந்த இனந்தெரியாத நபர்கள் 2 வெடி குண்டுகளை தொலைக்காட்சி அலுவலகத்தின் மீது வீசிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
இச்சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பதற்றம் நிலவுவதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. சம்பவ இடத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக கண்காணிப்புக் கமெராவில் பதிவாகியுள்ள காட்சியின்படி பொலிஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.