கேலிக்கூத்தாகும் “கவிஞர்” பட்டங்கள்!!

1088

Poem

தமிழ் இலக்கிய வரலாற்றில், சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்த காலத்திலிருந்து இன்று வரை தமிழ் இலக்கியத்துறை பல்வேறு வடிவங்களில் நகர்ந்து கொண்டேதான் இருக்கிறது. அதில் கவிதைக்கென்று தனியிடமும் இருக்கிறது.

பேச்சு மொழிக் காலத்திலையே ஓரு வகை சந்த அசைவுகள் இருந்திருக்கென்பது ஆய்வுகளின் மூலம் நிருபிக்கப்பட்டிருக்கிறது. பின் வந்த எழுத்து மொழி வளர்ச்சியடையும் காலத்தில் இலக்கியமானது தனது முதல் வடிவமாக கவிதையினை எடுத்துக் கொண்டது என்கின்றனர்.

எனவே தமிழ் இலக்கியத் துறையின் ஆரம்ப வடிவம் கவிதையே. சங்கத்தமிழ் காலத்தில் கவிதை பாடிய பாணர்களே பின்னர் புலவர்களாகவும் கவிஞர்களாகவும் விளங்கியிருக்கின்றனர் என்கிறது ஓர் இலக்கிய ஆய்வு.

அக்காலத்தில் பொருள் தேட வேண்டிய தேவையும்.. வறுமையும்.. புகழின் மீதான விருப்பும்.. மன்னர்களை நல்வழிப்படுத்த வேண்டிய தேவையும் இருந்ததினால் புலவர்கள் அகம் மற்றும் புறம்சார் ஏராளமான இலக்கியங்களை படைத்திருக்கிறார்கள்.

இப்பண்புகள் காலம் கடந்தும் மருபியகாலம், சோழ மற்றும் நாயக்க காலங்கள் மட்டுமன்றி பின்வந்த காலங்களினூடே இன்றும் காணப்படுகின்றன. கவிஞர்களின் வறுமை மற்றும் சமூக சீர்ப்படுத்தல் கருத்துக்கள் என்பவற்றைக் கடந்து இன்று வெறும் புகழ்களுக்காக தங்களுக்குத் தாங்களே பல்வேறு பட்டங்களை இட்டு இலக்கியங்களை ஏனோ தானோவெனப் படைக்கும் போக்கே அதிகம் காணப்படுகிறது.

பட்டங்கள் விருதுகள் என்பவை சமூக அந்தஸ்துடையவை. அங்கீகரிக்கப்பட்ட அமைப்புக்கள், துறை சார் பாண்டித்தேயமுடைய நபர்கள் அல்லது நிறுவனங்கள் என்பவற்றினாலையே அவை வழங்கப்படுவதுண்டு.

அப்படி வழங்கப்படும் பட்டங்களே செல்லுபடியாவதுடன் மரியாதைக்குரியதாகவும் கணிக்கப்படும். அதனை வைத்திருப்பவரும் பெறுமதியாகக் பார்க்கப்படுவார். பட்டங்களை வழங்கும் நபரோ அல்லது அமைப்போ சமூகரீதியில் ஒத்துவராத பட்சத்தில் அதனால் வழங்கப்படும் பட்டங்களும், நபர்களும் எள்ளி நகையாடப்படுவார்கள்.

இது ஒரு புறம் இருக்க நேற்றுப் பெய்த மழைக்கு வெளித்தெரிந்த நிறையக் காளான்கள், முகநூல் பக்கத்தில் தங்களுக்குத்தாங்களே ”கவிஞர்” எனவும் ”கவிதாயினி” எனவும் பட்டங்களை வைத்துக் கொண்டு உலாவுவதைக் காணக்கூடியதாக உள்ளது.

உண்மையில் கவிஞர் பட்டமென்பது.. கவித்துவமுடையவர்கள் மற்றும் கற்பனைத்திறன் உடையவர்களுக்கு, அவர்களின் அறிவு, ஆற்றல், அனுபவம் என்பவற்றைக் கருத்திற்கொண்டே வழங்கப்படுவதுண்டு. ஆனால் எவ்வளவுதான் கற்பனைத்திறன் இருந்தாலும் அவர்களால் ஆக்கபுர்வமான பல்துறைசார் படைப்புக்களும் படைக்கப்பட்டிருத்தல் வேண்டும்.

அடிப்படையில் இலக்கியத்தை நேசிப்பதுடன் மற்றவரை மதிக்கத் தெரிந்தவராகவும் இருத்தல் வேண்டும். ஏனெனில் ஒரு பட்டம் பெறுபவன் அச்சமூகத்தை ஏதோ ஒரு வடிவத்தில் நெறிப்படுத்துபவனாகவே இருத்தல் வேண்டும்.

ஆனால் இங்கு நடப்பதோ வேறாக இருக்கிறது. தாமே ஓர் சமூக விமர்சனத்திற்கு உட்பட்டவர்களாக இருந்து கொண்டு, சமூக அந்தஸ்துடைய ”கவிஞர்” பட்டங்களை தமக்குத் தாமே வைத்துக் கொண்டு, இலக்கிய உலகில் கண்களை மூடிக்கொண்டு பால் குடிப்பதனைச் சுற்றம் அவதானித்துக் கொண்டுதான் இருக்கிறது.

எம் தமிழ் இலக்கியப்பாதையில் எத்தனையோ கவிஞர்கள், எண்ணில்லா படைப்புக்களை வெளியிட்டும் படைத்தும் இருக்கின்றனர். ஆனால்அத்தனைபேரும் தங்களைத்தாங்களே கவிஞர்கள் என அழைத்தது இல்லை.

ஈழத்து இலக்கியப்பாதையில் எட்டுப் பத்துக் கோணத்தில் படைப்புக்களை வெளியிட்டு தேசிய விருதுகளைப் பெற்ற மூத்த எழுத்தாளர்கள் பலர், அங்கீகரிக்கப்பட்ட பட்டங்கள் இருந்தும் இன்று கூட தம்மைத்தாம் கவிஞர்கள் என அழைப்பதில்லை. தமது படைப்புக்களிற்கும் தமது வாழ்விற்குமிடையே இடைவெளியை அவர்கள் வைத்திருந்ததும் இல்லை.

அவ்வாறான நிறைகுடங்கள் எங்களுக்குள்ளேயே இருக்கும் போது, இந்த சில் வண்டுகள் ஆர்வக் கோளாறினாலும் அவசர புத்தியினாலும் செயற்படும் விதமானது ஒட்டுமொத்த கவிஞர் வட்டத்தினையும் கேலிக்குரியதாக மாற்றியிருக்கிறது.

கவிஞர் எனும் பதத்திற்குரிய பெறுமதியே அற்றுப்போயிருக்கிறது. இக் ”கிலுசுத்தனமான கவிஞர்” களை முகநூலில் ஏராளமாகக் காணலாம். அப்பொழுது மட்டுமல்ல இப்பொழுதும் கூட, பெயருக்காகவும் புகழுக்காகவும் பட்டங்களை இரந்து கேட்கும் நபர்களையும் காசு கொடுத்தாவது பட்டங்களைப் பெறவேண்டும் என நினைக்கும் நபர்களையும், நெறி தவறாத இலக்கிய உலகம் தூக்கி எறிந்தே வந்திருக்கிறது.

அப்படியானவர்களை தயங்காமல் விமர்சித்தே வந்திருக்கிறது. சில பட்டங்களை மீளப் பெற்றும் இருக்கிறது. அப்படியான ஓர் தூய இலக்கியப்பரப்பு இருக்கின்ற வேளை.. தங்களுக்குத் தாங்களே ”கவிஞர்” எனப் பட்டம் இட்டுக்கொள்ளும் தற்புகழ்ச்சிக்காரர்களை விட்டுவைக்குமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

அண்மையில் வன்னியிலிருந்து பலர் ஆக்ரோஸமாக, வேகமாக வெடித்தெழுந்திருக்கிறார்கள். வன்னி என்பதற்கு ”வீரம்” என்றும் ”வணங்கா மண்” என்றும் பொருள் கொள்ளலாம். இதைவிட ”வதைபட்ட மண்” எனவும் பொருள் கொள்ளலாம். எனவே இவ் வன்னியின் நாமம் தாங்கி எழுதுகிறவர்கள் அதன் தன்மை கெடாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

சிறு பிள்ளைத்தனமாக, கட்டுரைகளுக்கு ”சரித்திரம்” எனப் பெயரிட்டு சரித்திரத்தின் தன்மையை சிதைக்கவும் கூடாது. எனவே எந்த ஒரு விடயத்தினையும் ஏற்றுக் கொள்ளக் கூடியவர்களுக்கே சொல்லிக் கொண்டிருக்க முடியும். ஏற்றுக் கொள்ளாதவிடத்து பொது வெளியே சிறந்ததாகும்.

நன்மை பயப்பின் நாலு பேருடன் பகைப்பது பெரிதல்ல. ஆகவே இக்கட்டுரை எவர் மனதையும் நோகடிப்பதற்காக வரையப்பட்டதல்ல. மாறாக விமர்சனத்தை ஏற்றுக் கொள்ளும் சமூகத்தாலேயே ஆரோக்கியமான படைப்புக்களை பிரசவிக்க முடியும் எனும் நப்பாசையினால் வரையப்பட்டதாகும்.

– தமிழின்பன்-