குவைத்தில் உயிரிழந்த மட்டக்களப்பு யுவதியின் சடலத்தை இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை!!

847

குவைத் நாட்டில் உயிரிழந்த மட்டக்களப்பைச் சேர்ந்த யுவதியின் சடலத்தை இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயிரிழந்த யுவதியின் குடும்ப உறவினர்கள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் மூன்றாம் குறுக்குத்தெருவில் வசித்து வந்த சோமசுந்தரம் சர்நீதியா (22) எனும் யுவதியே குவைத் உயிரிழந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த யுவதி கடந்த நான்கு மாதத்திற்கு முதல் குவைத் நாட்டிற்கு சென்றிருந்தார்.

இந்த யுவதியை காத்தான்குடியைச் சேர்ந்த உப முகவர் ஒருவரின் ஊடாக, கொழும்பிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் குவைத்துக்கு அனுப்பியிருந்தார்.

இந்த யுவதி கடந்த 01.03.2015 அன்று அவர் வேலை செய்த வீட்டில் உயிரிழந்துள்ளார்.
இவரைப் பற்றி கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தகவல் எதுவுமில்லாததால் இந்த யுவதியின் குடும்ப உறவினர்கள் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்த யுவதியின் குடும்ப உறவினர்களுக்கு இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தினால் அதன் அலுவலகத்திற்கு வருகை தருமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்தே யுவதி உயிரிழந்தமை தெரியவந்ததாக அவர்கள் குறிப்பிட்டனர்.
குறித்த யுவதிக்கு நான்கு வயதுடைய குழந்தை உண்டு எனவும் இவரது கணவர் மரணித்து விட்டதாகவும் உறவினர்கள் மேலும் தெரிவித்தனர்.

1 2